மணமேல்குடி அருகே பரபரப்பு: மீன்பிடி வலையில் சிக்கிய வாலிபர் உடல் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் மறியல்




மணமேல்குடி அருகே மீன்பிடி வலையில் வாலிபர் உடல் சிக்கியது. கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் உடல்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே அத்தாணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விக்னேஷ் (வயது 27). இவர் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வேலை விஷயமாக வெளியே சென்ற விக்னேஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் உடல் அத்தாணி குளத்தில் மீன்பிடிக்கும் வலையில் சிக்கியது. இதுகுறித்து மணமேல்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விக்னேஷ் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள், பொதுமக்கள் கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக முழு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments