மக்களவைத் தேர்தல் 2024: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டி. குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி




தமிழகத்தில் வேட்புமனு வாபஸ் முடிந்தது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி திருச்சி-35, பெரம்பலூர்-23, கரூர்-54, சிதம்பரம் (தனி)-14 தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் நேற்று முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர். திருச்சியில் 35 பேர், பெரம்பலூரில் 23 பேர், கரூரில் 54 பேர், சிதம்பரம்(தனி) தொகுதியில் 14 பேர் களம் காண்கின்றனர்.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடக்கத்தில் மந்தமாக இருந்த மனு தாக்கல் கடந்த 25-ந்தேதி சூடுபிடித்தது. அன்றைய தினம் மிகவும் நல்ல நாள் என்று கருதப்பட்டதால் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். அன்று ஒரே நாளில் மட்டும் 405 பேர் வேட்புமனுக்களை தாக்கல்செய்தனர்.

கடந்த 27-ந்தேதியுடன்மனு தாக்கல் நிறைவடைந்தது. அன்றைய நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1,403 பேர் 1,749மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 28-ந்தேதி நடைபெற்றது. அப்போது 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

950 பேர் போட்டி

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதில் 135 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் அதிக பட்சமாக கரூர் தொகுதியில் 54 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

வடசென்னை-தென் சென்னை

வடசென்னை தொகுதியில் டாக்டர் கலாநிதி வீராசாமி (தி.மு.க.), ராயபுரம் மனோ (அ.தி.மு.க.), ஆர்.சி. பால்கனகராஜ் (பா.ஜனதா), இக்பால் (பகுஜன் சமாஜ்). அமுதினி (நாம் தமிழர்) ஆகியோர் உள்பட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தென் சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், பா.ஜனதா சார்பில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்பட 41 பேர் களத்தில் உள்ளனர்.

மத்திய சென்னை-ஸ்ரீபெரும்புதூர்

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தயாநிதி மாறன், தே.மு.தி.க. சார்பில் ப.பார்த்தசாரதி, பா.ஜனதா சார்பில் வினோஜ் பி.செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கார்த்திகேயன் உள்பட 31 பேர் போட்டியில் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. சார்பில் டாக்டர் ஜி.பிரேம்குமார், த.மா.கா. சார்பில் வி.என்.வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் ரவிச்சந்திரன் உள்பட 31 பேர் களம் காண்கின்றனர்.

திருவள்ளூர்-காஞ்சீபுரம்

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில், தே.மு.தி.க. சார்பில் கு.நல்லதம்பி, பா.ஜனதா சார்பில் பொன்.வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மு.ஜெகதீஷ் சுந்தர் உள்பட 14 பேர் போட்டியில் உள்ளனர்.

காஞ்சீபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் க.செல்வம், அ.தி.மு.க. சார்பில் ஈ.ராஜசேகர், பா.ம.க. சார்பில் வெ.ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சந்தோஷ்குமார் உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர்.

சவுமியா அன்புமணி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை எதிர்த்து 24 பேர் களத்தில் உள்ளனர்.

இதேபோல் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 25 பேரும், நாமக்கல் தொகுதியில் 40 பேரும், கிருஷ்ணகிரி தொகுதியில் 27 பேரும் போட்டியிடுகின்றனர்.

மத்திய மந்திரி எல்.முருகன்

நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா, அ.தி.மு.க. சார்பில் டி.லோகேஷ் தமிழ்செல்வன், பா.ஜனதா சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் உள்பட 16 பேர் களத்தில் உள்ளனர்.

திருப்பூர் தொகுதியில் 13 பேரும், ஈரோடு தொகுதியில் 31 பேரும், வேலூர் 31 பேரும், அரக்கோணம் தொகுதியில் 26 பேரும், திருவண்ணாமலையில் 31 பேரும், ஆரணியில் 29 பேரும், விழுப்புரம் தொகுதியில் 17 பேரும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 பேரும் போட்டியிடுகின்றனர்.

அண்ணாமலை

கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மாநில தலைவர் கே.அண்ணாமலையை எதிர்த்து 37 பேர் களம் காண்கின்றனர்.

பொள்ளாச்சியில் 15 பேரும், திண்டுக்கல் தொகுதியில் 15 பேரும், கரூர் தொகுதியில் 54 பேரும் போட்டியிடுகின்றனர்.

துரை வைகோ-திருமாவளவன்

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவை எதிர்த்து 35 பேர் போட்டியிடுகிறார்கள். பெரம்பலூரில் 23 பேரும், கடலூரில் 19 பேரும் களம் காண்கிறார்கள்.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை எதிர்த்து 14 பேர் போட்டியிடுகிறார்கள்.

மயிலாடுதுறையில் 17 பேரும், நாகப்பட்டினத்தில் 9 பேரும், தஞ்சாவூரில் 12 பேரும் போட்டியில் உள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம்-டி.டி.வி. தினகரன்

தேனி தொகுதியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை எதிர்த்து 25 பேர் போட்டியிடுகிறார்கள்.

இதேபோல் ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக 25 பேர் களம் காண்கிறார்கள்.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து 20 பேர் போட்டியிடுகிறார்கள். மதுரையில் 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள கனிமொழியை எதிர்த்து 28 பேர் போட்டியிடுகிறார்கள்.

நெல்லையில் 23 பேரும், தென்காசி தொகுதியில் 15 பேரும் களம் இறங்கியுள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து 22 பேர் களத்தில் உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments