முதியோர் கட்டணச் சலுகை ரத்து: ரயில்வே ஈட்டிய கூடுதல் வருவாய் இவ்வளவா?




நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரயில்வே அமைச்சகம், முதியவர்களுக்கான கட்டணச் சலுகையைத் திரும்ப பெற்றது. இதன் வழியாக ரூ.5,800 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

மார்ச் 20,2020 அன்று மத்திய ரயில்வே அமைச்சகம், முதியோர்களுக்கான ரயில் கட்டணச் சலுகையைத் திரும்ப பெற்றது.

அதற்கு முன்னர் ரயில் கட்டணத்தில் 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவிகிதமும் 60 வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு 40 சதவிகிதமும் சலுகையாக அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் வெவ்வேறு காலக் கட்டங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரயில்வே அமைச்சகத்திடம் பெற்ற தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளார்.

மார்ச் 20,2020 முதல் ஜன.31,2024 வரையிலான காலத்தில் மூன்று முறை அவர் பெற்ற தகவலின் அடிப்படையில் ஓட்டுமொத்தமாக ரூ.13,287 கோடி வருவாய், முதியவர்கள் பயணம் செய்ததன் மூலமாக ரயில்வே ஈட்டியுள்ளது.

அந்த முழு பயணக் கட்டணத்தில் சலுகை விலை நடைமுறையில் இருந்திருந்தால் ரூ.5,875 கோடி சலுகையாக அளிக்கப்பட்டிருக்கும்.

இந்த கூடுதல் கட்டணம் ரயில்வே துறையின் வருவாயை அதிகரித்துள்ளது.

முன்னதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே ஒவ்வொரு பயணிக்கும் 55 சதவிகிதம் சலுகை விலையிலேயே சேவை அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

இது குறித்து கவுர், “தற்போதைய அரசு புதிய சலுகைகளை அளிப்பதற்கு பதிலாக முந்தைய சலுகைகளைத் திரும்ப பெற்று வருகிறது. இதன் மூலம் கரோனோ காலக்கட்டத்துக்கு முன்பு 55 சதவிகிதத்துக்கும் அதிகமாக அரசு சலுகையை அளித்தது தெரிய வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments