புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பெண்ணை கொன்று தாலி சங்கிலி கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு




புதுக்கோட்டை அருகே பட்டப்பகலில் பெண்ணை கொன்று தாலி சங்கிலியை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் கொலை

புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பெரியநாயகி (வயது58). இவர் வீட்டில் மாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்ட மாட்டை தேடி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை தேடி சென்றனர். அங்கு வீட்டில் இருந்து சற்று தொலைவில் அவர் நெற்றி மற்றும் முகத்தில் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலி, 4 கிராம் மூக்குத்தி ஆகியவை இல்லாமல் இருந்தது. மர்மநபர்கள் யாரோ அவரை கொலை செய்து விட்டு அதனை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் பெரியநாயகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக வந்த அவரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, தாலி சங்கிலி, மூக்குத்தியை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments