புதிய மோட்டார் சைக்கிளில் அடிக்கடி பழுது: வாடிக்கையாளருக்கு ரூ.1.12 லட்சம் வழங்க வேண்டும் ஷோரூம் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு அதிரடி உத்தரவு




சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் வக்கீல் செந்தில்குமார் (வயது 40). இவர், கடந்த 2022-ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஆர்.ஜி. மோட்டார்ஸ் ஷோரூம் நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கினார். அதற்கான தொகை ரூ.82 ஆயிரத்து 431-ஐ அவர் முழுமையாக செலுத்தி உள்ளார். இந்தநிலையில் அவர் வாங்கிய மோட்டார் சைக்கிளில் அடிக்கடி பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் செந்தில்குமார் இதுகுறித்து ஷோரூம் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோட்டார் சைக்கிள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் தனக்கு புதிய மோட்டார் சைக்கிளை வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். அதற்கு ஷோரூம் நிர்வாகிகள் முறையாக பதில் கூறவில்லை என தெரிகிறது. மேலும் செந்தில்குமாரை அடிக்கடி ஷோரூமுக்கு வரவழைத்து அலைக்கழித்துள்ளனர். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். பின்னர் அவர் இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஈரோடு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் (நீதிபதி) எஸ்.பூரணி மற்றும் உறுப்பினர்கள் வி.பி.வேலுச்சாமி, எஸ்.வரதராஜ பெருமாள் ஆகியோர் கையில் எடுத்தனர். இதுதொடர்பாக ஷோரூம் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் நீதிபதி பூரணி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், மோட்டார் சைக்கிளின் முழு தொகையான ரூ.82 ஆயிரத்து 431-ஐ சம்பந்தப்பட்ட ஷோரூம் நிர்வாகிகள் செந்தில்குமாருக்கு வழங்க வேண்டும் என்றும், மேலும் அவருக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரமும் சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மொத்தம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 431-ஐ ஒரு மாத காலத்துக்குள் செந்தில்குமாருக்கு வழக்க வேண்டும் என்றும் நீதிபதி பூரணி உத்தரவிட்டுள்ளார். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தால் உடனடியாக மாற்றி கொடுக்க வேண்டும். எந்த வகையிலும் அலைக்கழிக்கக்கூடாது என்றும் நீதிபதி கண்டித்தார். வாடிக்கையாளர்களாகிய நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்று அழைக்கழிக்கப்பட்டால், இழப்பீடு நம்மாலும் பெற முடியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments