வாக்குச்சாவடிக்கு சென்று எப்படி வாக்களிக்க வேண்டும்?



தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.வாக்குச்சாவடியில் ஒரு தேர்தல் அலுவலர், 4 உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் கட்சிகளின் பூத் முகவர்கள் ஆகியோர் இருப்பார்கள்.

வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் வாக்கு மையத்திற்கு செல்லும் முன் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்று மற்றும் பூத் சிலிப் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். செல்போன் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

பெயர் கூறி அழைப்பார்கள்

வாக்காளர்கள் தங்களது வாகனங்களை வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்திலேயே நிறுத்த வேண்டும். இதையடுத்து, வாக்குச்சாவடி சென்று, அங்கு வரிசையில் நிற்க வேண்டும்.

தொடர்ந்து ஒவ்வொருவராக உள்ளே செல்வார்கள். வாக்குச்சாவடி உள்ளே சென்றதும் முதல் தேர்தல் அலுவலர், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து, உரத்த குரலில் உங்களது பெயரை படிப்பார். அதை வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து கட்சி முகவர்களும் உறுதி செய்வார்கள்.

கையெழுத்து இடவேண்டும்

அதன்பின், 2-வது தேர்தல் அலுவலர் உங்கள் ஆள் காட்டி விரலில் அடையாள மையிட்டு, வாக்களிக்கும் சிலிப் வழங்கி, வாக்காளர் எண்ணை பதிவு செய்வார். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். அடுத்ததாக, 3-வது தேர்தல் அலுவலரிடம் நீங்கள் ஓட்டு பதிவிற்கான சிலிப்பை காண்பிக்க வேண்டும். அவர் வாக்குப்பதிவு எந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'பேலட் பட்டனை' அழுத்துவார்.4-வதாக, ஓட்டுபோடும் மறைவிடத்திற்கு சென்று உங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரத்தில், ஒவ்வொரு வேட்பாளரின் சின்னம், பெயருக்கு அருகில் நீல நிறத்தில் பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பொத்தானை அழுத்த வேண்டும். யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் ‘நோட்டா' என்ற பொத்தானை அழுத்தலாம்.

நீல பட்டனை பயன்படுத்தும் போது நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் சிவப்பு விளக்கு எரியும். வாக்குப்பதிவு செய்தபின் ‘பீப்' என்ற ஒலி கேட்கும். எந்திரத்தில் கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள விளக்கு அணைந்து விடும்.

உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் அருகே, வைக்கப்பட்டு இருக்கும் வி.வி.பேடு எந்திரத்தில், நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் 7 வினாடிகள், அந்த சின்னம் தெரியும். அதை பார்த்து உறுதி செய்யலாம்.

அதன்பின் நீங்கள் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வரவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments