விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கிழக்கு கடற்கரை சாலையில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!



விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கிழக்கு கடற்கரை சாலையில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்குக்கடற்கரை சாலை பணிகள் கடந்த 2000-ம் ஆண்டில் தொடங்கி 2005-ம் ஆண்டு பணிகள் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வந்தது. தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை முதல் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதியான அரசங்கரை வரை உள்ள கடற்கரை கிராமங்களையொட்டி கிழக்குக்கடற்கரை சாலை சுமார் 76 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிழக்குக்கடற்கரை சாலை பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான வணிக ரீதியிலான பொருட்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு கொண்டு செல்லவும், பெருநகரங்களிலிருந்து பல்வேறு பொருட்களை தென்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும் ஏராளமாக 4 சக்கர கனரக வாகனங்கள் கிழக்கு கடற்கரைசாலை வழியாக சென்று வருகின்றன.
 
கிழக்கு கடற்கரை சாலை தற்போது இரு வழிச்சாலையாக மட்டுமே இருக்கும் நிலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் வழிவிட முயற்சிக்கும் போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் கடக்க முயற்சிக்கும் போதும் எதிர்பாராத விதமாக சாலையை விட்டு வாகனங்கள் பல்லத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.

கிழக்குக்கடற்கரை சாலையில் ஏகப்பட்ட வளைவுகள் உள்ளதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலைக்கு அருகில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் அளவுக்கு எந்த ஆஸ்பத்திரியும் இல்லை.

உதாரணமாக கட்டுமாவடிக்கு அருகில் விபத்து ஏற்பட்டால் கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரமுள்ள பேராவூரணி அல்லது 45 கிலோ மீட்டர் தூரமுள்ள பட்டுக்கோட்டைக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கிழக்கு கடற்கரை சாலைகளில் குறிப்பிட்ட தூரங்களுக்கிடையில் ஆங்காங்கே முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments