ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கு இணையதளம் அரசு அறிவிப்பு




ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கு இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இ-பாஸ் நடைமுறை

ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல இ-பாஸ் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இ-பாஸ் பெறுவதற்கு இணையதள முகவரியை அரசு அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இப்படி கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில்கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இணையதள முகவரி

கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப்பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும்இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணையதள முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து 6-ந்தேதி (இன்று) காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இ-மெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.

பாதிப்பு ஏற்படாது

மேலும். இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் இந்த நடைமுறையினை வருகிற 7-ந்தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 30-ந்தேதி வரை பின்பற்றுவார்கள். இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும், அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments