புயல் சின்னம் எதிரொலி: மாவட்டம் முழுவதும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிக நிறுத்தம் கடல் சீற்றத்தால் மூழ்கி வரும் மணல் திட்டு




புயல் சின்னம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வனத்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிச்சைமூப்பன்வலசை பகுதியில் மணல் திட்டை கடல் நீர் மூழ்கடித்து வருகிறது.

படகு போக்குவரத்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவு மற்றும் மணல் திட்டு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக பாம்பன், மண்டபம், ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன்வலசை கடற்கரையில் இருந்து மணல் திட்டு பகுதிக்கும் வனத்துறை சார்பில் சுற்றுலா படகு போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.

இதனிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி, கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இதனால் 3-வது நாளாக ஏர்வாடி பிச்சைமூப்பன்வலசை கடற்கரையில் இருந்து நடுக்கடலில் உள்ள மணல் திட்டு பகுதிக்கு வனத்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து, பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றம் காரணமாக பிச்சை மூப்பன்வலசை பகுதியில் நடுக்கடலில் உள்ள மணல் திட்டு கடல் நீரில் மூழ்கி வருகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் படகு நிறுத்தும் பாலத்திலும் கடல் சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மறு அறிவிப்பு வரும்வரை

இதேபோல் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவுக்கும், மண்டபம் பகுதியில் இருந்து பூமரிச்சான்தீவுக்கும் இயக்கப்பட்டு வந்த வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்தும் 3-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது,

புயல் கரையை கடந்து காற்று மற்றும் கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே வழக்கம்போல் வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படும். மறு அறிவிப்பு வரும் வரை படகு போக்குவரத்து இயக்கப்படாது என்று தெரிவித்தனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments