சமூக சேவையாற்றும் இளைஞர்களுக்கு மாநில விருது - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!



சமூக சேவையாற்றும் இளைஞர்கள் மாநில விருதை பெற இன்று (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

2024-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். 1.4.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31.3.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.

கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை மாவட்ட தேர்வுக்குழு மூலம் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக அனைத்து விண்ணப்பதாரர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் 3 பிரதிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே மேற்கண்ட நிதியாண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments