அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகாரிகள் கவனிப்பார்களா?




அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கிழக்கு கடற்கரைசாலை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக அளவில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கால்நடைகள் வளர்ப்போர் அவற்றை வீடுகளில் கட்டி போடாமல் இருப்பதே முக்கிய காரணம் என கூறப்ப டுகிறது. இதனால் சாலைகளில் இரவு பகலாக மாடுகள் சுற்றித்திரிகின்றன.

அபராதம்

மேலும் இரவு நேரங்களில் சாலையிலேயே மாடுகள் படுத்துக்கொள்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பிடிபட்ட கால்நடைகளை அதற்கான பாதுகாப்பு கொட்டகையில் அடைத்து வைத்தும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு கால்நடைகள் வளர்ப்போர் கட்டுப்படாததால் மீண்டும் சாலையில் கால்நடைகள் வலம் வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

தற்போது அதிராம்பட்டினம் நகராட்சி ஏரிப்புறக்கரை, ராஜாமடம் ஊராட்சி ஆகிய பகுதியில் உள்ள மாடுகள் சாலை பகுதியில் விடப்படுகின்றன. இதனால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

எனவே கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments