பா.ஜனதா கூட்டணி
பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இந்த கூட்டணி அரசில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதையடுத்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். அவர் பிரதமராவதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன.
பின்னர் நடந்த பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக (பிரதமராக) மோடி தேர்வு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி அழைப்பு
இதைத்தொடர்ந்து பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கொடுத்தனர்.
பிரதமர் மோடியும், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, தனக்கு ஆதரவு அளித்துள்ள எம்.பி.க்களின் கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட அவர், பிரதமர் மோடியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
பிரமாண்ட ஏற்பாடுகள்
இது ஒருபுறம் நடந்து கொண்டு இருந்த வேளையில், மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுபோல் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடியின் மந்திரி சபையில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த யார்-யாருக்கு இடம் வழங்குவது என்பது தொடர்பான ஆலோசனை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் அமித்ஷா உள்ளிட்ட மூத்த மந்திரிகள் கலந்து கொண்டனர்.
இதில் முடிவு எட்டப்பட்டதும், பதவி ஏற்பு விழா ஏற்பாடுகளும் மும்முரமாகின. ஜனாதிபதி மாளிகை முற்றம் உள்ளிட்ட பகுதிகள் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன.
வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன.
3-வது முறை பிரதமர் பதவி ஏற்றார்
பதவி ஏற்பு விழா நடைபெற்ற ஜனாதிபதி மாளிகை முற்றத்துக்கு பிரதமர் மோடி, இரவு 7.14 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வந்தார். அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர்.
தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு. விழா நடைபெற்ற இடத்துக்கு பாரம்பரிய முறைப்படி அழைத்து வரப்பட்டார்.
விழா மேடைக்கு 7.21 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்க, பிரதமர் மோடி தலைமையிலான புதிய கூட்டணி மந்திரி சபைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து இரவு 7.23 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய மந்திரி சபை
பிரதமரை தொடர்ந்து 30 கேபினட் மந்திரிகள், தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள் 5 பேர் உள்பட 71 மந்திரிகளுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமானமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகிய 3 பேரும் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர்.
பிரதமருடன் நேற்று பதவி ஏற்றுக்கொண்ட மந்திரிகள் விவரம் வருமாறு:-
கேபினட் மந்திரிகள்
1. ராஜ்நாத் சிங்
2. அமித்ஷா
3. நிதின்கட்காரி
4. ஜே.பி.நட்டா
5. சிவராஜ் சிங் சவுகான்
6. நிர்மலா சீதாராமன்
7. ஜெய்சங்கர்
8. மனோகர் லால் கட்டார்.
9. எச்.டி.குமாரசாமி.
10. பியூஷ் கோயல்
11. தர்மேந்திர பிரதான்
12. ஜித்தன் ராம் மஞ்சி
13. ராஜீவ் ரஞ்சன் சிங்
14. சர்பானந்த் சோனாவால்
15. வீரேந்திர குமார்
16. ராம் மோகன் நாயுடு
17. பிரகலாத் ஜோஷி
18. ஜூவல் ஓரம்.
19. கிரிராஜ் சிங்
20.அஷ்வினி வைஷ்ணவ்
21. ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
22. பூபேந்திர யாதவ்
23. கஜேந்திர சிங் செகாவத்
24. அன்னபூர்ணா தேவி.
25. கிரண் ரிஜூஜூ
26. ஹர்தீப் சிங் புரி
27 மன்சுக் மாண்டவியா
28. கிஷன் ரெட்டி.
29. சிராக் பாஸ்வான்.
30 சி.ஆர்.பாட்டில்.
ராஜாங்க மந்திரிகள் (தனிப்பொறுப்பு)
1. இந்திர ஜித் சிங்.
2. ஜிதேந்திர சிங்
3. அர்ஜூன் ராம் மேக்வால்.
4. பிரதாப் ராவ் ஜாதவ்.
5. ஜெயந்த் சாங்க்வி.
ராஜாங்க மந்திரிகள்
1. நிதின் பிரசாத்
2. ஸ்ரீபாத் நாயக்
3. பங்கஜ் சவுத்ரி.
4. கிருஷ்ணன்பால்.
5. ராம்தாஸ் அத்வாலே.
6. ராம்நாத் தாகூர்.
7. நித்யானந்த் ராய்
8. அனுப்பிரியா பட்டீல்
9. வி.சோமண்ணா,
10. சந்திரசேகர பொம்மசானி.
11. எஸ்.பி.சிங் பாகல்.
12. ஷோபா கரந்தலாஜே.
13. கீர்த்தி வர்த்தன் சிங்.
14. பி.எல்.வர்மா.
15. சந்தனு தாகூர்.
16. சுரேஷ் கோபி.
17. எல்.முருகன்.
18. அஜய் தம்தா.
19. சஞ்சய் குமார்.
20. பாகிராம் சவுத்ரி.
21. சதீஷ் சந்திர துபே.
23. சஞ்சய் சேட்
24. ரவ்னீத் சிங்.
25. துர்காதாஸ் உய்கி
26. ரக்சா நிகில் கட்சே
27. சுகாந்து மஜூம்தார்
28. சாவித்திரி தாக்கூர்
29. தோஹன் சாகு
30. ராஜ்பூஷன் சவுத்திரி
31. பூபதி ராஜூஸ்ரீநிவாஸ் வர்மா
32. ஹர்ஷ் மல்ஹோத்ரா
33. நிமுபென் பாம்பனியா
34. முரளிதர் மொஹோல்
35. ஜார்ஜ் குரியன்
36. பவித்ரமார்கரீட்டா
வெளிநாட்டு தலைவர்கள்
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷேரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபீப் உள்ளிட்ட தலைவர்களும், வெளிநாட்டு தூதர்களும் கலந்து கொண்டனர்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார்,
நடிகர்கள்-தொழில் அதிபர்கள்
தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அவருடைய மகன் ஆனந்த் அம்பானி, கவுதம் அதானி, நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அக்ஷய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடியுடன் நேற்று பதவியேற்றுக்கொண்ட கேபினட் மந்திரிகளின் வாழ்க்கைக்குறிப்பு வருமாறு:-
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங் (72): உத்தரபிரதேசத்தின் பாபவ்ராவில் பிறந்தவர். 13 வயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இயற்பியல் விரிவுரையாளராக வாழ்க்கையை தொடங்கியவர். பாரதிய ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றினார்.
1984-ல் மாநில பா.ஜனதா இளைஞரணி தலைவர் ஆனார். 1997-ல் மாநில பா.ஜனதா தலைவர் ஆனார். மாநில மந்திரியாக பணியாற்றி இருக்கிறார்.
1999-ல் மத்திய மந்திரியாக பணியாற்றிய இவர் 2000-ல் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பதவியேற்றார். 2003-ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் விவசாய மந்திரியாக இருந்தார்.
இருமுறை பா.ஜனதா தேசிய தலைவராக பதவி வகித்து உள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலில் லக்னோ தொகுதியில் வென்று மோடி அரசில் உள்துறை மந்திரியாகவும், 2019-ல் அதே தொகுதியில் வெற்றி பெற்று ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தார்.
இந்த முறையும் அதே தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மந்திரி சபையில் இடம் பிடித்து உள்ளார்.
இவருக்கு சாவித்ரி என்ற மனைவியும், பங்கஜ், நீரஜ், அனாமிகா என 3 பிள்ளைகளும் உள்ளனர்.
அமித்ஷா
அமித்ஷா (59): மராட்டிய மாநிலம் மும்பையில் குஜராத் வணிக குடும்பத்தில் பிறந்தவர். பி.எஸ்.சி. உயிர் வேதியியலில் பட்டம் பெற்று இருக்கிறார். குழந்தை பருவம் முதல் ஆர்.எஸ்எஸ். இயக்கத்தில் ஈடுபட்டார். 1986-ல் பா.ஜனதாவில் சேர்ந்தார். மறு ஆண்டு முதல் கட்சியின் இளைஞரணியில் தீவிரமாக பணியாற்றினார்.
1991-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அத்வானிக்காக குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார். 1995-ல் குஜராத்தில் கேசுபாய் படேல் தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்றபோது மோடியுடன் இணைந்து கிராமப்புறங்களில் கட்சியை கொண்டு செல்ல உழைத்தார்.
2001-ல் மோடி குஜராத் முதல்-மந்திரியானபோது அவரது வலதுகரமானார். 2002 தேர்தலுக்குப்பின்னர் மோடி மீண்டும் முதல்-மந்திரியானபோது உள்துறை, சட்டம் என 12 துறைகளுக்கு மந்திரியாக பணியாற்றி இருக்கிறார்.
மோடி பிரதமரானமோது அமித்ஷாவும் தேசிய அரசியலுக்கு வந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.
2014 ஜூலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஆனார். மோடிக்கு தொடர்ந்து பக்கபலமாக திகழ்ந்தார். மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து கொண்டே 2019 தேர்தலில் அத்வானியின் தொகுதியான குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
இந்த முறையும் அந்த தொகுதியில் சுமார் 7½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.
இவருக்கு சோனல் என்ற மனைவியும், ஜெய்ஷா என்ற மகனும் உள்ளனர்.
நிதின் கட்காரி
நிதின் கட்காரி (67): மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்தவர். எம்.காம். எல்.எல்.பி. பட்டங்கள் பெற்றவர். மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மந்திரி பதவி வகித்தவர். மாநில பா.ஜனதா கட்சியின் தலைவராக இருந்து பின்னர் தேசிய தலைவராக உயர்ந்தார்.
2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார்.
இந்த முறையும் நாக்பூர் தொகுதியை அவர் தக்க வைத்து இருக்கிறார்.
இவருக்கு மனைவி காஞ்சன் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா (63): இமாசல பிரதேசத்தை சேர்ந்த ஜே.பி.நட்டா சட்டம் பயின்றவர். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் பொதுவாழ்க்கையை தொடங்கிய இவர் பா.ஜனதாவின் இளைஞரணி தலைவராக கடந்த 1991-ம் ஆண்டு உயர்ந்தார்.
பா.ஜனதாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர் இமாசல பிரதேசத்தில் மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு பா.ஜனதாவின் தேசிய செயல் தலைவராக உயர்ந்த ஜே.பி.நட்டா 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் கட்சியின் தேசிய தலைவரானார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் இமாசல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மல்லிகா பானர்ஜி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
சிவராஜ் சிங் சவுகான்
சிவராஜ் சிங் சவுகான் (65): மத்திய பிரதேசத்தில் 4 முறை முதல்-மந்திரி பதவியை அலங்கரித்த சிவராஜ் சிங் சவுகான், மாநில மக்களால் ‘மாமா’ என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.
விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் சிறந்த கல்வியறிவு கொண்டவர். தத்துவ பாடத்தில் முதுகலைப்படிப்பை முடித்துள்ள இவர் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார்.
தனது 13 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து பொதுவாழ்க்கையை தொடங்கிய சவுகான், மாநில அளவிலும் தேசிய அளவிலும் பா.ஜனதாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார்.
கடந்த 1990-ம் ஆண்டு முதல்முறையாக மாநில எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து பலமுறை மாநில சட்டசபையில் தனது இடத்தை தக்க வைத்தார்.
இடையில் விதிசா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பலமுறை எம்.பி. தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்வில் முதல்முறையாக அவருக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது.
பியூஸ் கோயல்
பியூஸ் கோயல் (59): மராட்டிய மாநிலம் மும்பையில் பிறந்தவர். பா.ஜனதா தேசிய பொருளாளராக இருந்தவர். மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும் இருந்தார். தற்போது மும்பை வடக்கு தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மோடி அரசின் முதல் பதவிக்காலத்தில் நிலக்கரி, சுரங்கம். ரெயில்வே என பல துறைகளுக்கு மந்திரியாக இருந்துள்ளார். 2-வது ஆட்சிக்காலத்தில் வர்த்தகத்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்தார்.
இவரது தந்தை வேதபிரகாஷ் கோயல் மத்தியில் வாஜ்பாய் ஆட்சியில் மந்திரியாக இருந்தவர்.
பியூஸ் கோயலுக்கு மனைவி சீமாவும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
குமாரசாமி
குமாரசாமி (64): கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், மாநில மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன்.
தனது கல்லூரி காலத்தில் இருந்தே திரைத்துறை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த குமாரசாமி அரசியலுக்கு வந்தது ஒரு விபத்தாகவே கருதப்படுகிறது.
அரசியல் சூழலில் வளர்ந்த குமாரசாமி, 1996-ம் ஆண்டு கனகபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகரமாக தேர்தல் அரசியலில் இறங்கினார். பின்னர் 2004 சட்டசபை தேர்தலில் முதல் முறையாக மாநில சட்டசபைக்கு தேர்வானார்.
5 முறை எம்.எல்.ஏ.வான இவர் 2006-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி சார்பிலும், 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலும் மாநில முதல்-மந்திரியானார்.
நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் பெற்றதன் மூலம் மாநிலத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக தன்னை நிலைநிறுத்தியதுடன், மதசார்பற்ற ஜனதாதளத்தின் இருப்பையும் உறுதி செய்திருக்கிறார்.
பிரகலாத் ஜோஷி
பிரகலாத் ஜோஷி (61): கர்நாடக மாநிலம் பீஜப்பூரில் பிறந்தவர். மாநில பா.ஜனதா முன்னாள் தலைவரான இவர், 5-வது முறையாக எம்.பி.யாகி இருக்கிறார்.
கடந்த முறை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்த இவர், மீண்டும் மந்திரி பதவியை அலங்கரித்து இருக்கிறார்.
இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான் (54): ஒடிசா மாநிலம் டய்சேரில் பிறந்தவர். எம்.ஏ. பட்டதாரி. ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து பணியாற்றியவர். தந்தை தேவேந்திர பிரதான் மத்தியில் வாஜ்பாய் ஆட்சியில் மந்திரி பதவி வகித்தார்.
நரேந்திர மோடியின் முந்தைய 2 அரசிலும் பல்வேறு துறைகளுக்கு மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான், ஒடிசாவில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பெரும் பங்காற்றி இருந்தார். எனவே மாநில முதல்-மந்திரி பதவிக்கு இவரது பெயர் அடிபட்டது.
ஆனால் மீண்டும் மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டிருப்பதன் மூலம் இவர் தொடர்ந்து மத்திய அரசிலேயே அங்கம் வகித்து வருகிறார்.
இவருக்கு மிருதுளா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
கிரிராஜ் சிங்
கிரிராஜ் சிங் (71): பீகார் மாநிலம் பர்ஹியாவில் பிறந்தவர். பீகாரில் பல்வேறு துறைகளில் மந்திரி பதவி வகித்து இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய 2 அரசுகளிலும் பல்வேறு துறைகளுக்கு மந்திரியாக இருந்துள்ளார்.
கடந்த 2014 தேர்தலில் நவடா தொகுதியிலும், 2019 மற்றும் 2024 தேர்தலில் பெகுசாராய் தொகுதியிலும் வெற்றி பெற்று உள்ளார்.
இவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு குழநதையும் உள்ளனர்.
கஜேந்திர சிங் செகாவத்
கஜேந்திர சிங் செகாவத் (56): ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பிறந்தவர். எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக விளங்கியவர்.
ஜோத்பூர் தொகுதியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ள இவர், மோடி அரசின் முந்தைய 2 பதவிக்காலங்களிலும் மந்திரி சபையை அலங்கரித்து இருக்கிறார்.
இவருக்கு நானந்த் கன்வார் என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
அன்னபூர்ணா தேவி
அன்னபூர்ணா தேவி (54): ஜார்கண்டின் தும்காவில் பிறந்த இவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்து உள்ளார். ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ. ரமேஷ் யாதவின் மனைவியான இவர் குடும்பத்தலைவியாக இருந்தார்.
ஆனால் 1998-ம் ஆண்டு ரமேஷ் யாதவின் மரணம், இவரை அரசியல் களத்தை நோக்கி நகர்த்தியது. முதலில் தனது கணவரின் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தில் இணைந்து அரசியலை தொடங்கிய அன்னபூர்ணா தேவி, 2019-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு பா.ஜனதாவுக்கு தாவினார்.
பா.ஜனதா சார்பில் ஜார்கண்டின் கோடர்மா தொகுதியில் கடந்த 2019 மற்றும் இந்த தேர்தல்களிலும் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசில் கல்வித்துறை ராஜாங்க மந்திரியானார்.
முன்னதாக மாநில அரசிலும் பல்வேறு துறைகளுக்கு மந்திரி பொறுப்பை பெற்று இருக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் முக்கிய தலைவராக விளங்கி வரும் அன்னபூர்ணா தேவிக்கு மீண்டும் மத்திய மந்திரிசபையில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
ராம் மோகன் நாயுடு
ராம் மோகன் நாயுடு (37). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், மறைந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யர்ரான் நாயுடுவின் மகன் ஆவார். அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் என்ஜினீரியங் மற்றும் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.
தந்தை விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, 2012-ல் அரசியலுக்கு வந்த ராம் மோகன் நாயுடு 2014 பொதுத்தேர்தலில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் தொகுதியில் இருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். தொடர்ந்து 3-வது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா (53). மத்திய பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராட்டிய அரச குடும்பத்தின் வாரிசான இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கினார். கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2020-ல் பா.ஜனதாவில் இணைந்தார். அதே ஆண்டில் அவருக்கு பா.ஜனதா அரசு கேபினட் மந்திரி பதவியை வழங்கியது.
தற்போதைய தேர்தலில் மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியில் முதல் முறையாக பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கிய ஜோதிராதித்ய சிந்தியா 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அஸ்விணி வைஷ்ணவ்
அஸ்விணி வைஷ்ணவ் (53). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். ஒடிசாவின் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் 2002ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் ஜூலை 2021-ல், நரேந்திர மோடி மந்திரி சபையில் இணைந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு ரெயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டன.
பல சந்தர்ப்பங்களில் பிரதமரிடமிருந்து மட்டுமல்ல, அவரது மந்திரிசபை சகாக்களிடமிருந்தும் பாராட்டை பெற்ற அஸ்விணி வைஷ்ணவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா (51): குஜராத்தின் போர்பந்தர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மன்சுக் மாண்டவியா, பாவ்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்
சிறுவயதிலேயே அகில பாரதிய வித்யாத்தி பரிஷத்தில் இணைந்து பொது வாழ்வை தொடங்கிய இவர் மாநில பா.ஜனதாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு முதல் முறையாக மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், குஜராத்தின் மிகவும் இளவயது எம்.எல்.ஏ.வானார்.
கால்நடை மருத்துவரான இவர், அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். அத்துடன் பி.எச்.டி. பட்டமும் பெற்றுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த இவர், மோடி அரசின் முதல் 2 ஆட்சிக்காலத்திலும் பல்வேறு துறைகளின் இணை மந்திரியாக பதவி வகித்தார்.
ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது இவர் நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியானார். இதன் மூலம் அவரது புகழ் அதிகரித்தது.
தற்போது முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அவர் மீண்டும் மந்திரியாகி இருக்கிறார்.
மனோகர்லால் கட்டார்
மனோகர்லால் கட்டார் (70): அரியானா முதல்-மந்திரி பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய கட்டார், 1977-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.சின் நிரந்தர உறுப்பினரானார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வான கட்டார், முதல்-மந்திரி பதவியையும் பெற்றுக்கொண்டார்.
இந்த தேர்தலில் முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மந்திரிசபையிலும் இடம் பிடித்து இருக்கிறார்.
வேளாண் குடும்பத்தில் பிறந்த இவர் பிரம்மச்சாரி ஆவார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு (52): வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தை சேர்ந்த கிரண் ரிஜிஜு சட்டம் பயின்றவர். 2004-ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த இவர் 14-வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் 2009 தேர்தலை சந்தித்த இவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
மீண்டும் பா.ஜனதாவில் இணைந்த இவர் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் வெற்றி பெற்றார். சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மந்திரி பதவியையும் வகித்து உள்ளார்.
ஜிதன் ராம் மஞ்சி
ஜிதன் ராம் மஞ்சி (79): பீகாரை சேர்ந்த இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித்தலைவரான மஞ்சி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் கயா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வருகிறார்.
ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்தி வரும் இவர் மாநிலத்தில் சில காலம் முதல்-மந்திரி பதவியையும் வகித்து உள்ளார்.
முன்னதாக நிதிஷ்குமார் அரசில் மந்திரியாகவும் இருந்துள்ளார்.
சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான் (41): பீகாரை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான், தந்தை மறைவுக்குப்பின் அவரது லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
இவரது தலைமையில் இந்த தேர்தலில் மாநிலத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளையும் கட்சி வென்று இருக்கிறது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் நன்மதிப்பை பெற்று உள்ளார்.
அத்துடன் இளம் வயதிலேயே மத்திய மந்திரி பதவியும் அவரை தேடி வந்திருக்கிறது.
மத்திய மந்திரி சபையில் 3 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.
3 மந்திரிகள்
ஜனாதிபதி மாளிகையில் நேற்று புதிய மத்திய மந்திரி சபை பதவி ஏற்றது. இதி்ல் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகிய 3 பேர் இடம்பெற்று உள்ளனர்.
மத்திய மந்திரியாக மீண்டும் பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமனின் வயது 65. திருச்சி மாவட்டம் முசிறியை பூர்வீகமாக கொண்டவர். திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இளங்கலை பட்டப்படிப்பையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பையும் படித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். 2010-ம் ஆண்டு பா.ஜனதா தேசிய செய்தித் தொடர்பாளர் ஆனார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைந்த போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபையில் நிர்மலா சீதாராமன் வர்த்தக துறை இணை மந்திரி ஆனார். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு பாதுகாப்பு துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ம் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைந்தபோது மோடியின் மந்திரி சபையில் நிதி மந்திரி ஆனார். தற்போது மீண்டும் மத்திய மந்திரியாக பதவியேற்றுள்ளார்.
ஜெய்சங்கர்
மற்றொரு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 69 வயது ஆகிறது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். இவருடைய தந்தை சுப்பிரமணியம் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரியாக பணியாற்றினார். எனவே ஜெய்சங்கர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் படித்தார்.
1977-ம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரி ஆனார். மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளராக கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றினார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன் மோடி மந்திரி சபையில் வெளியுறவுத்துறை மந்திரி ஆனார். அப்போது குஜராத்தில் இருந்து மேல் சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 2-வது முறையாக மீண்டும் மத்திய மந்திரியாகி உள்ளார்.
இவருக்கு கியாகோ என்ற மனைவியும், துருவா, அர்ஜூன், மேத்தா ஆகிய 3 மகன்களும் இருக்கிறார்கள்.
எல்.முருகன்
எல்.முருகன், 1977-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தில் பிறந்தவர். தற்போது இவருக்கு 47 வயது ஆகிறது. அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த இவர், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பையும் பயின்றவர்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக 2017-2020-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் பதவி வகித்தார். இந்த பதவி காலம் முடிந்ததும் அவர், தமிழக பா.ஜனதா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதி தமிழக பா.ஜனதா தலைவராக பதவி ஏற்றார். இவர், மாநில தலைவர் பதவியை ஏற்ற பின்னர் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பா.ஜனதாவில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திய ‘வேல் யாத்திரை’ தேசிய தலைவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, இந்த முறை சட்டமன்றத்துக்குள் பா.ஜனதாவினர் காலடி எடுத்து வைப்பார்கள் என்று எல்.முருகன் உறுதியளித்து தேர்தல் பணியில் ஈடுபட்டார். அவர், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று புதிய வரலாறை படைத்தது.
தமிழக சட்டமன்றத்துக்குள் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சென்றுள்ளதால், அதற்கான பரிசாக எல்.முருகனுக்கு மத்திய இணை மந்திரி பதவி கிடைத்தது. அப்போது, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் அதே மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக இருந்து வருகிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். எனவே, மேல்-சபை எம்.பி.யாக இருப்பதன் அடிப்படையில் அவருக்கு மீண்டும் மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி பெயர் கலையரசி. சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை உதவி பேராசிரியராக உள்ளார். இந்த தம்பதியருக்கு தர்னேஷ் மற்றும் இந்திரஜித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் தர்னேஷ் 12-ம் வகுப்பும், இந்திரஜித் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.