புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 36,333 பேர் எழுதினர் 9,022 பேர் எழுத வரவில்லை




புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 36,333 பேர் எழுதினர். 9,022 பேர் எழுத வரவில்லை.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 166 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வை எழுத 45 ஆயிரத்து 355 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் வர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தனர். இருப்பினும் ஒரு சிலர் காலதாமதமாக வந்தனர். ஆனால் அவர்களை தேர்வு மையத்தின் உள்ளே அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி சென்றனர்.

36,333 பேர் எழுதினர்

இதற்கிடையில் தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி அளவில் முடிவடைந்தது. பகல் 12.45 மணிக்கு தேர்வு மையத்தில் இருந்து தேர்வர்கள் வெளியே வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை 36 ஆயிரத்து 333 பேர் எழுதினர். 9 ஆயிரத்து 22 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இத்தேர்வு 166 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களாலும், 12 கண்காணிப்பு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டது. மேலும் இத்தேர்வு நிகழ்வுகளை 177 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து, தேர்வு நடைமுறைகள் குறித்து வீடியோ பதிவு செய்யப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்பட 3 மையங்களில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் மெர்சிரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தேர்வு குறித்து தேர்வர்கள் சிலர் கூறுகையில், தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே தொடர்ந்து இத்தேர்வுக்காக தயாராகி வந்தவர்கள், கேள்விகளுக்கான பதிலை எளிதாக எழுதியிருப்பர் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments