எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

விசைப்படகில்...

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சிபிராஜ் (வயது 22) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பார்த்திபன் (32), கருப்பையா மகன் முரளி (42), குமார் மகன் சாரதி (28), ராமதாஸ் (52) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் 31 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

4 மீனவர்கள் கைது

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும் கைது செய்ததோடு அவர்களது விசைப்படகையையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு சங்க தலைவர் ஹசன் முகைதீன் கூறுகையில், தடைகாலம் முடிந்து இப்போது தான் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 2 மாத தடைகாலத்தில் மீனவர்கள் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை

தடைகாலத்தில் மீனவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் படகுகளை சரி செய்தனர். இந்நிலையில் தடைகாலம் முடிந்து மீண்டும் மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது விசைப்படகையும் விடுவிக்க வேண்டும் என்றார்.

மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments