உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து - வேளாண் அதிகாரி எச்சரிக்கை!



உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களும், மா, முந்திரி, தென்னை, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான யூரியா 4,869 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 685 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 968 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 4,624 மெட்ரிக் டன்கள், சூப்பர் 506 மெட்ரிக் டன்கள் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் விவசாயிகள் சாகுபடிக்கு தேவையான உரங்களை மண்வள அட்டையின் பரிந்துரைப்படி இட்டால் உரச்செலவை குறைப்பதோடு, மண்வளமும் மேம்படும், நெல் சாகுபடியில் யூரியா உரங்களை இடும்பொழுது பிரித்து பிரித்து இட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு ஒரு தெளிப்பிற்கு அதிகபட்சமாக 26 கிலோவிற்கு மேல் நெற்பயிருக்கு இடக்கூடாது. அதிகமாக இடும்பொழுது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாவதோடு, முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிர் சாய்வதற்கும் வழி வகுக்கின்றது.

மொத்த உர விற்பனையாளர்கள், வெளி மாவட்டங்களுக்கு உரங்களை ஏற்றுமதி செய்யக் கூடாது எனவும், உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யக்கூடாது. சில்லறை உர விற்பனையாளர்களுக்கு அனுப்பும் பொழுது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.

உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்கள், கலப்பு உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதும், அதனை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும் விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்கு செல்லும்பொழுது, ஆதார் அட்டையுடன், மண்வள அட்டை பரிந்துரையின்படி, உரம் வாங்கி பயன்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சில்லறை உர விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு உர மூட்டையில் காணப்படும் அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் அல்லாத நுகர்வோர், சாகுபடி இல்லாத விவசாயிகள் ஆகியோருக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. மேலும் ஒரே நபருக்கு தேவைக்கு அதிகமாக விற்பனை செய்யக்கூடாது.

இதுகுறித்து அரசின் உத்தரவுப்படி, மாதம் வாரியாக உரம் அதிகமாக வாங்கும் முதல் 20 விவசாயிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் அடிப்படையில் விற்பனையாளர்களுக்கு விற்பனை தடையாணை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறப்பு பறக்கும் படை குழுவினரால் திடீர் ஆய்வின் போது மேற்கண்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டாலும் அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலும் உர கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments