ஐஸ் தொழிற்சாலையில் மின்மீட்டர் பெட்டி பொருத்த ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது! புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!!




தனியார் ஐஸ் தொழிற்சாலையில் மின்மீட்டர் பெட்டி பொருத்த ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஐஸ் தொழிற்சாலை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தனியார் ஐஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சூரிய ஒளி மூலம் 96 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் சூரிய மின்சார தகடுகள் அமைக்க முடிவு செய்தனர். இதற்கான பணிகளை அந்த தொழிற்சாலையின் மேலாளர் நாராயணசாமி கவனித்து வந்தார்.இதில் சூரிய மின்சார தகடுகளுக்கான மின்மீட்டர் பெட்டி பொருத்துவதற்காக அறந்தாங்கி அருகே நாகுடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அவர் அணுகினார். அங்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த பிருந்தாவனன் (வயது 44), மின்மீட்டர் பெட்டி வைப்பதற்காக அனுமதி வழங்க ரூ.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என நாராயணசாமியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு பணம் தர முடியாது என அவர் தெரிவித்திருக்கிறார்.

ரூ.1 லட்சம் லஞ்சம்

அதன்பின்னர் ரூ.1¾ லட்சம் லஞ்சமாக கொடுக்குமாறு மின்வாரிய அதிகாரி கேட்டுள்ளார். மேலும் ரூ.1 லட்சத்தை முன்பணமாக முதலில் கொடுக்குமாறும், மீதி தொகையை மின்மீட்டர் பெட்டி பொருத்திய பின்பு தருமாறும் கூறியிருக்கிறார். ஆனால் நாராயணசாமி லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.

இதனால் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச பணத்தை வாங்கும்போது மின்வாரிய அதிகாரியை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நாராயணசாமியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சம் லஞ்ச பணத்தை மின்வாரிய அதிகாரியிடம் கொடுக்க அறிவுறுத்தினர்.

உதவி செயற்பொறியாளர் கைது

இதையடுத்து நாகுடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நாராயணசாமி நேற்று மதியம் சென்றார். அங்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனனிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்தார். லஞ்சமாக பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் பீட்டர் உள்பட போலீசார் விரைந்து சென்று, பிருந்தாவனனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக இருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மின் மீட்டர் பெட்டி பொருத்துவதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments