2020-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு 4 ஆண்டுகள் கடந்து விட்டது: தஞ்சை-விக்கிரவாண்டி சாலை பயன்பாட்டுக்கு வருவது எப்போது? பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு




தஞ்சை-விக்கிரவாண்டி சாலை பணிகளை 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு 4 ஆண்டுகள் கடந்து விட்டது. இதனால் இந்த சாலை பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை

தஞ்சையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி செல்லும் தற்போதைய சாலை மிகவும் குறுகலானதாகும். இந்த சாலையின் ஓரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.

இந்த வழித்தடத்தில் தஞ்சை-கும்பகோணம் இடையேயான தூரம் 50 கி.மீ. ஆகும். இதை பஸ்கள் கடந்து செல்வதற்கு 1½ மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் 2 மணி நேரமும் கூட ஆகிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தஞ்சை-விக்கிரவாண்டி இடையே உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.

ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீடு

இதற்கான திட்டமதிப்பீடு கடந்த 2010-ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. தஞ்சை-விக்கிரவாண்டி இடையேயான வழித்தடத்தில் புதிதாக பாலங்கள் அமைக்க கடந்த 2015-ம் ஆண்டு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2017-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு கூடுதலாக ரூ.3 ஆயிரத்து 517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மூன்று பிரிவுகளாக பணிகள்

நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் பிரிவில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான பணிகள் நடந்து வருகின்றன. இதில் கெடிலம், தென்பெண்ணை உள்பட 26 ஆற்றுப்பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள், 3 ரெயில்வே மேம்பாலங்கள், 2 கனரக வாகனம் நிறுத்துமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இரண்டாவது பிரிவில் சேத்தியாத்தோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரையிலான பணிகள் நடந்து வருகிறது. இதில் 34 ஆற்றுப் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜெயங்கொண்டம், கூட்டுரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி உள்பட 23 இடங்களில் மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் கட்டப்பட்டு உள்ளன.

சாலை அமைக்கும் பணிகள்

மூன்றாவது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான பணிகள் நடந்து வருகின்றன. இதில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 22 ஆற்றுப் பாலங்கள், தாராசுரத்தில் ரெயில்வே மேம்பாலம், வளையப்பேட்டை, ராஜகிரி, திருக்கருக்காவூர் உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள கோபுராஜபுரம், மேல செம்மங்குடி, பொன்மான் மேய்ந்தநல்லூர், சூலமங்கலம், புறக்குடி, வடக்குமாங்குடி, அருள்மொழி பேட்டை, வையச்சேரி, உதாரமங்கலம், அகரமாங்குடி, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

4 ஆண்டுகளை கடந்து விட்டது

இந்த சாலை பணிகள் கடந்த 2020-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பணிகள் முதலில் ஜரூராக நடந்தது. ஆனால் அதன்பின்னர் பணிகள் ஜவ்வு மிட்டாய்போல் இழு... இழு.. என்று இழுக்கப்பட்டு வருகிறது.

பணிகள் தீவிரமாக நடைபெறாததால் திட்டமிட்டு 4 ஆண்டுகளை கடந்த பின்னரும் வேலை நடந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே உள்ள சாலையில் மிகுந்த சிரமத்துடன் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தங்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று எண்ணி இருந்த நேரத்தில் பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவடையாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால் நொந்து நூடுல்சாகி உள்ளனர்.

உடனடியாக முடிக்க கோரிக்கை

இதனால் இந்த பணிகளை உடனடியாக முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments