பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை அலுவலர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிவுறுத்தல்




பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிவுறுத்தினார்.

அதிகாரி ஆய்வு

புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில், பட்டா மாறுதல் நிலுவை மற்றும் தள்ளுபடி இனங்கள் குறித்து, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மதுசூதன் ரெட்டி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் மெர்சி ரம்யா உடன் இருந்தார். ஆய்வுக்கு பின் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:-

பொதுமக்களுக்கான பட்டா மாறுதல், நில அளவைகள் குறித்து எண்ணற்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பட்டா மாறுதல் நிலுவை மற்றும் தள்ளுபடி இனங்கள் குறித்தும், நகர நிலவரித்திட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது, அனைத்து வகையான சான்றுகளையும் 15 நாட்களுக்குள் முடித்திடவும், 7 முதல் 10 நாட்களுக்குள் முடிக்கக்கூடிய சான்றுகளை காலதாமதமின்றி முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

விண்ணப்பங்கள்

முழுபுலம் பட்டா மாறுதல் மாதத்திற்கு எத்தனை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன என்பது குறித்தும், அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் எந்த கிராமத்தில் இருந்து பெறப்படுகின்றன என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் தள்ளுபடிக்கான காரணங்களை கண்டறிந்து தள்ளுபடி சதவீதத்தினை 10 சதவீதத்துக்குள் வைத்துக்கொள்ளவும், மேலும் விண்ணப்பங்களை 2 மாதத்திற்கு மேல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது எனவும், சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரப்பெறும் பட்டா மாறுதல் இனங்களில் புல எண் மற்றும் உட்பிரிவு எண்கள் தவறாக குறிப்பிட்டு அனுப்புவதை தவிர்த்திட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள் மற்றும் தலைமை நில அளவையர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

பயிர் கணக்கெடுப்பு

அதன்பின்னர், வாகவாசல், தட்டாம்பட்டி வருவாய் கிராமம் மற்றும் முள்ளூர் ஊராட்சி, தென்னதிரையான்பட்டி கிராமத்தில், பயிர் சாகுபடி செய்துள்ளதை, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு முறையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். இந்தநிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், ஆர்.டி.ஓ.க்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்), மண்டல துணை இயக்குனர் (நில அளவைத் துறை) சசிக்குமார், உதவி இயக்குனர் (நில அளவைத் துறை) அப்துல் ஜாகிர் உசேன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments