சட்டவிரோத செயல்களில் தொடர்பு? சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 17 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி




புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு உள்பட 17 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தினர் கூறுகையில், "மதுபானம் விற்பனை உள்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் போலீசார் சிலர் தொடர்பு வைத்திருப்பதாக உயர் அதிகாரிக்கு தகவல் வந்தது. அவர்களிடம் போலீசார் பணம் வாங்கி கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதும், இதேபோல போலீஸ் நிலையங்களுக்கு புகார் மனு கொடுக்க வருபவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், பணம் கேட்டல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து உயர் அதிகாரியின் கவனத்திற்கு வந்தது. அதன்பேரில் 17 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தனர்.

 இந்த உத்தரவில் 17 பேர் கறம்பக்குடி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கே.புதுப்பட்டி, அன்னவாசல், விராலிமலை, ஆலங்குடி, மீமிசல், திருப்புனவாசல், இலுப்பூர் ஆகிய போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறவர்கள் ஆவார்கள். போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும், மாவட்டத்தில் இதேபோல ஏதேனும் புகார் வந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 17 பேரை ஆயுதப்படைக்கு மாற்றிய விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments