சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் மேம்படுத்தப்பட்ட 12 சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு கொண்டுவரப்பட உள்ளன




சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் அமைக்கும் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட 12 சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு கொண்டு வரப்பட உள்ளன.

சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடம்

கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தில் ‘சாகர்மாலா' என்ற திட்டத்தை மத்திய தொழில் துறையின் தொழில் கொள்கை மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கியுள்ளது. இந்த கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத்திட்டத்தின், ஒரு பகுதி தமிழகத்தில் சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடமாகும். போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், தொழில் வளர்ச்சியை எளிதாக்குவதற்காக இந்த திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு முக்கிய பங்கு வகிக்கும் இந்த திட்டம் ரூ.6 ஆயிரத்து 448 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.4 ஆயிரத்து 62 கோடி கடன் வழங்கி உள்ளது. ‘‘தமிழ்நாடு விஷன் 2023’’ என்ற பெயரில் 6 தொழில் வழித்தடங்களை கட்டமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் மதுரை - தூத்துக்குடி, சென்னை - திருச்சி ஆகிய 2 வழித்தடங்கள் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித் தடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சாலைகள்

இந்த திட்டத்தால் தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் 10 உள்மாவட்டங்கள் உள்பட 23 மாவட்டங்கள் பயனடைகின்றன. இந்த மாவட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் தரம் உயர்த்தப்படுகிறது.

இதில் மேலூர்- திருப்பத்தூர், தஞ்சாவூர்- மன்னார்குடி ஆகிய 5 மாநில சாலைகள் மேம்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம்- அரக்கோணம், செங்கல்பட்டு- காஞ்சீபுரம் ஆகிய 12 சாலை மேம்படுத்தும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

அடுத்த ஆண்டு (2025) மே அல்லது ஜூன் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சாலைகள் கொண்டு வரப்படும்.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்

இந்தத் திட்டத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைந்துள்ள துறைமுகங்கள் சர்வதேச விமான நிலையங்கள், தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் ஆகியவை இணைக்கப்பட்டு தரம் உயர்த்தப்படுகிறது.

இதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுடன் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க செய்யப்படும். மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்திற்கு இவை உத்வேகம் அளிக்கும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments