கடல் சீற்றம் காரணமாக மண்டபம், பாம்பனில் வனத்துறை படகு போக்குவரத்து நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்




பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் மற்றும் பாம்பனில் வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடல் சீற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள மனோலி தீவு, குருசடை தீவு மற்றும் மணல் திட்டு உள்ளிட்ட இடங்களுக்கு வனத்துறை சார்பில் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கி இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. அதோடு கடல் சீற்றமாக காணப்படுகின்றது.

படகு போக்குவரத்து நிறுத்தம்

இதனால் மண்டபம் அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள வனத்துறை படகு தளத்தில் இருந்து பூமரிச்சான்தீவுக்கு இயக்கப்பட்டு வந்த வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதே போல் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவுக்கு இயக்கப்பட்டு வந்த வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வனத்துறை படகு நிறுத்தும் தளம் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதே போல் ஏர்வாடி பிச்சைமூப்பன்வலசை கடற்கரையிலும் வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் சுற்றுலா வந்த பயணிகள் படகு சவாரி நிறுத்தப்பட்டு உள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்த பின்னர் மீண்டும் தீவுகளுக்கு வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

© 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments