படகு செல்லும் பாதையை மட்டுமல்ல, எல்லை தாண்டினாலும் காண்பிக்கும்: மீனவர்களுக்கு வரப்பிரசாதம் ‘டிரான்ஸ்பாண்டர்’ கருவி புதுக்கோட்டையில் 280 விசைப்படகுகளில் பொருத்தப்படுகிறது




படகு செல்லும் பாதையை மட்டுமின்றி எல்லை தாண்டினாலும் காண்பிக்கும் ‘டிரான்ஸ்பாண்டர்’ கருவி புதுக்கோட்டை மாவட்டத்தில் 280 விசைப்படகுகளில் விரைவில் பொருத்தப்பட உள்ளது.

விசைப்படகுகள்

தமிழகத்தில் விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்கையில் எல்லை தாண்டி செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள். மேலும் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய மீன்பிடி தளங்களில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர்.இதில் நெடுந்தீவு அருகே கடலில் எல்லை தாண்டி செல்லும்போது இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைதுக்குள்ளாகின்றனர். சமீபத்தில் கூட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் கைதாகி இருந்தனர். மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வதில் இந்திய மற்றும் இலங்கை நாட்டின் எல்லையை அறிந்து கொள்வதில் சில நேரங்களில் சிரமமாகி விடுகிறது. அவ்வாறு தெரியாமல் எல்லை தாண்டும்போது விபரீதமாகி விடுகிறது.

‘டிரான்ஸ்பாண்டர்’ கருவி

இந்த நிலையில் அவசர காலங்களில் மீனவர்களிடம் தகவல்களை பரிமாறிக்கொள்ள எதுவாக விசைப்படகுகளில் ‘டிரான்ஸ்பாண்டர்' கருவிகள் பொருத்தும் பணி கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மீனவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள இந்த ‘டிரான்ஸ்பாண்டர்' கருவிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது. இந்த கருவியை விசைப்படகுகளில் பொருத்தி, புளூடூத் வாயிலாக இக்கருவியை இணைத்து செல்போனில் உள்ள செயலி வழியாக தகவல்களை பெற முடியும். இதில் கரையில் இருந்தும், கடலில் உள்ள மீனவர்களிடம் இருந்தும் இரு வழி செய்தி பரிமாறிக்கொள்ளலாம்.

தகவல் பரிமாற்றம்

இந்த கருவி இந்திய எல்லைக்குள் கடலில் மீன்பிடிக்க உதவும். கடலில் படகு செல்லும் பாதையை காட்டுவதோடு, எல்லை தாண்டி செல்வதை கருவி காண்பித்துவிடும். இதேபோல புயல், மழை போன்ற காலத்தின்போது ஆழ்கடலில் விசைப்படகுகள் சிக்கிக்கொண்டால், கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும், மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப முடியும். மேலும் கரையில் இருந்து மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ என தகவல் பரிமாற முடியும். இதேபோல அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை படகிற்கு அனுப்பலாம். கடலில் ஆபத்து காலங்களில் விசைப்படகுகள் நிற்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து மீட்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

விரைவில் பொருத்தம்

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் விசைப்படகுகளில் ‘டிரான்ஸ்பாண்டர்' கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் விசைப்படகுகளில் ‘டிரான்ஸ்பாண்டர்' கருவி பொருத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 280 விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கருவிகள் வந்ததும் விரைவில் பொருத்தப்படும்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments