கறம்பக்குடி, அன்னவாசல், ஆலங்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்




கறம்பக்குடி, அன்னவாசல், ஆலங்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் சீனி கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் ஜோன்ஸ் மேரி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் அரிபாஸ்கர் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். முதல் நிலை ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.26 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.21 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல்

அன்னவாசல் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாலா தலைமை தாங்கினார். அருள்மேரி முன்னிலை வகித்தார். ரெத்தின வேல், தேவராஜ், ஜோஷி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகை ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணிமுடித்த அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆலங்குடி

ஆலங்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குடி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் (பொறுப்பு) ஸ்டெல்லாமேரி தலைமை தாங்கினார். ரேகாநேன்சி, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மணிமேகலை கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இ.எஸ்.ஐ. திட்டத்தை அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் 1 ஆண்டு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், திருவரங்குளம் வட்டாரளவில் உள்ள அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments