‘‘மாணவ-மாணவிகள் இலக்கை அடைய தன்னம்பிக்கை அவசியம்’’ கலெக்டர் அருணா பேச்சு




மாணவ-மாணவிகள் இலக்கை அடைய தன்னம்பிக்கை அவசியம் என கலெக்டர் அருணா தெரிவித்தார்.

கலந்துரையாடல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடும் ‘காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் அருணா கலந்துரையாடினார்.

புதுக்கோட்டை கலெக்டராக அருணா பொறுப்பேற்ற பின் இந்தநிகழ்ச்சியில் முதன்முதலாக மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். மேலும் அரசின் திட்டங்கள் குறித்தும், தான் படித்து, இந்த பதவிக்கு வந்த நிலை குறித்தும் தெரிவித்தார்.

தன்னம்பிக்கை அவசியம்

தொடர்ந்து கலெக்டர் அருணா கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் எதிர்கால இலக்கை முடிவு செய்துகொள்ள வேண்டும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதில் இருந்து தடம் மாறக்கூடாது. முடிவெடுப்பதில் பெண்கள் தீர்க்கமானவர்கள். ஆண்கள் கூட சற்று தடுமாறலாம். அதனால் மாணவ-மாணவிகள் தங்களது இலக்கை அடைய தன்னம்பிக்கை அவசியம். தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். எனது ரோல் மாடல் என் தந்தை தான்.பெண்கள் தங்களது பணியில் நிர்வாக திறமையை வெளிப்படுத்தும் போது தான் அங்கீகரிக்கப்படுவார்கள். கலெக்டர் பதவி என்பது ஆண், பெண்களுக்கு பொதுவானது தான். இதில் நிர்வாக திறமை அவசியம்'' என்றார்.

பரதநாட்டியம்

கலந்துரையாடலின் போது மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி பாட்டுப்பாடியும், பரதநாட்டியம் ஆடியும், சொற்பொழிவாற்றியும் அசத்தினர். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments