தொண்டி அருகே தடை செய்த என்ஜின் பொருத்திய படகு பறிமுதல்




தடைசெய்யப்பட்ட என்ஜின் பொருத்தி மீன்பிடிக்க சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்டது.

தடைசெய்யப்பட்ட என்ஜின்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், மீனபிடிக்க பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாத என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று பாசிப்பட்டினம் கடற்கரை நோக்கி செல்வதாகவும் இந்தப் படகு இலங்கையை சேர்ந்த படகாக இருக்கலாம் என்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ளது எனவும் தொண்டி கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தொண்டி கடற்கரை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலர் இளையராஜா, போலீசார் சதாம் உசேன் ஆகியோர் பாசிபட்டினம் கடற்கரைக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் நின்ற தடை செய்யப்பட்ட என்ஜினுடன் படகை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர்.

படகு பறிமுதல்

அதனைத் தொடர்ந்து அந்தப் படகு உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தியதில், படகின் உரிமையாளர் பாசி பட்டினத்தை சேர்ந்த சர்புதீன் என்பவர் மகன் அபூபக்கர் (வயது 35) என்பதும் கடந்த ஒரு வாரமாக தடை செய்யப்பட்ட என்ஜினை அவரது பைபர் படகில் பொருத்தி மீன் பிடித்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகை பறிமுதல் செய்து தொண்டி கடற்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இதுகுறித்து தொண்டி கடற்கரை காவல் நிலைய போலீசார் படகு உரிமையாளர் அபூபக்கரிடம் விசாரணை நடத்தி, இவர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர். தொண்டி கடற்கரை காவல் நிலைய போலீசார் தடை செய்யப்பட்ட என்ஜினை பைபர் படகில் பொருத்தி கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments