ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் பெறலாம் என கூறி கும்பகோணம் மளிகை கடைக்காரரிடம் ரூ.9½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை




ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் லாபம் பெறலாம் என கூறி, கும்பகோணத்தை சேர்ந்த மளிகை கடைக்காரரிடம் ரூ.9½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் வர்த்தகம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 54 வயதான ஒருவர். மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு சம்பவத்தன்று ஆன்லைன் வர்த்தகம் முறையில் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் வந்தது. மேலும் அதற்கு கீழே விண்ணப்பிப்பதற்கான லிங்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

அதில் தனது சுய விவரம், வங்கி கணக்கு மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து சமர்பித்தார். பின்னர் எதிர்முனையில் பேசிய மர்மநபர், ஆன்லைன் வர்த்தகத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெற தனது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி மளிகை கடைக்காரர் பல்வேறு தவணைகளாக ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு

இதையடுத்து இணையவழியில் வர்த்தகம் செய்த மளிகை கடைக்காரருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட மர்மநபரிடம், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு மறுமுனையில் பேசிய மர்மநபர், ஆன்லைன் வர்த்தகத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்திய பின்னர் தங்களது வங்கிக்கணக்கில் பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என கூறினார்.

எனவே வர்த்தகத்தில் மேலும், பணம் கட்டுமாறு கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அப்போதுதான் தனக்கு மோசடி நடந்துள்ளதை மளிகை கடைக்காரர் உணர்ந்தார். இது குறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments