பிரதமாின் நிதி உதவி திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 3,889 விவசாயிகள் இணைக்கவில்லை




பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 3,889 விவசாயிகள் இணைக்கவில்லை.

நிதி உதவி திட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின் கவுரவ நிதித் திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் 01.02.2019-க்கு முன்பு நேரடி பட்டா உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக ஏப்ரல் முதல் ஜூலை வரை, ஆகஸ்டு முதல் நவம்பர் வரை, டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து மாற்றிகொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3,889 பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர்.

சிறப்பு உதவி மையம்

இதேபோல விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பி.எம். கிஷான் இணையதளம் மற்றும் செயலி மூலம் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடைசி தவணையானது விவரங்கள் பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,378 பயனாளிகள் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.

இத்திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய கிராமங்கள் தோறும் கிராம பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை தெரிந்துகொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை அணுகி தவணைத் தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இதற்கென சிறப்பு உதவி மையம் பிரதி வெள்ளி தோறும் செயல்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments