வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு: கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் அருணா அறிவிப்பு




வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்தார்.

தூர்வாரும் பணி

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில், நீர் வரத்துவாரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருணா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கவிநாடு ஊராட்சி, செல்லுக்குடி கிராமத்தில் உள்ள கவிநாடு கண்மாய் நீர் வரத்துவாரி வாய்க்கால், பூசத்துறை கிராமத்தில் உள்ள தெற்கு வெள்ளாறு நீர் வரத்துவாரி வாய்க்கால், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தாஞ்சி நீர் வரத்துவாரி கண்மாய், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், இசுகு கண்மாய் மற்றும் இசுகுப்பட்டி கிராமம், ஓடக்குளம் கண்மாய் நீர் வரத்துவாரி ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.

கட்டுப்பாட்டு அறை

அப்போது கலெக்டர் அருணா கூறியதாவது:- மழைநீர் வழிந்தோடும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாருதல், சீரற்ற சாலைகளை சரி செய்தல், பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடியது. பேரிடர் காலங்களில், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் 04322 222207 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் அனைவரும் வடகிழக்கு பருவ மழையின்போது, தமிழக அரசின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments