ராமநாதபுரத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ்நிலையத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு




ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் 90 சதவீத பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

புதிய பஸ் நிலையம்

ராமநாதபுரம் மக்களின் தேவைக்கேற்ப புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து நவீனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.20 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கேற்ப பஸ்நிலையத்தில் இருந்த கடைகள் மூடப்பட்டு அவர்களுக்கு பழைய பஸ்நிலையத்தில் சங்கத்தினரின் ஒப்புதலின்படி கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பஸ்நிலைய கட்டிடம் முழுவதும் இடித்து கடந்த ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது. இந்த புதிய பஸ்நிலையம் 4.1 ஏக்கர் பரப்பளவில் 35 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் அமைவதோடு, பஸ் நிலைய வளாக பகுதியில் 50 பஸ்கள் நின்று செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பஸ்நிலையத்தில் மக்கள் வசதிக்காக 92 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 231 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், கார்கள் வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்ல அணுகு சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு

இதுதவிர, தாய்மார்கள் பாலூட்டும் அறை, புறக்காவல்நிலையம், முன்பதிவு அறை, உணவகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்கள், பெண்களுக்கு தலா 8 கழிப்பறைகள் வீதம் 16 கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பயணிகள் நடப்பதற்கு ஏதுவாக பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. பஸ்நிலையத்தின் அனைத்து பகுதிகளிளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டு 24 மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கிய கட்டுமான பணிகள் இரவு பகலாக நடந்து தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதம் உள்ள பணிகளை விரைந்து ஓரிரு வாரத்தில் முடித்து ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் புதிய பஸ் நிலையத்தினை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ராமநாதபுரம் பஸ் நிலைய இடநெருக்கடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments