சூரியஒளி மின்விளக்குகள் கொள்முதலில் விதிமீறல்: 8 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட 11 போ் மீது வழக்குப்பதிவு




புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு சூரிய ஒளி மின் விளக்குகள் அமைத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 8 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட 11 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையான இடங்களில் சூரிய ஒளியில் செயல்படும் தெரு விளக்குகளை அமைத்துக் கொள்ள கடந்த 2019-இல் அதிமுக ஆட்சியின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு ஆட்சியரால் அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில், அறந்தாங்கி, அரிமளம், கறம்பக்குடி, திருமயம், திருவரங்குளம், கந்தா்வக்கோட்டை, மணமேல்குடி மற்றும் குன்றாண்டாா்கோவில் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் சூரிய ஒளி மின் விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும், வெளிச்சந்தையில் கிடைக்கும் சூரிய ஒளி மின்விளக்கின் விலையைவிட 5 மடங்கு கூடுதலாகவும், முறைப்படி ஒப்பந்த அறிவிப்பை வெளியிடாமல், ஒப்பந்தப்புள்ளி கோரி கொள்முதல் செய்ததுபோல போலியான ஆவணங்களைத் தயாரித்து ஏமாற்றி, அரசுக்கு ரூ.3.72 கோடி இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா்களான அறந்தாங்கி பி.எல்.சிவகாமி, அரிமளம் ஏ.ஆயிஷா ராணி, கறம்பக்குடி எஸ்.ரவி, திருமயம் என்.சங்கா், திருவரங்குளம் எஸ். அசோகன், கந்தா்வக்கோட்டை என். அரசமணி, மணமேல்குடி ஆா். ரவிச்சந்திரன், குன்றாண்டாா்கோவில் கலைச்செல்வி மற்றும் தனியாா் ஏஜென்சி மூலம் சூரியஒளி மின் விளக்குகள் விற்பனை செய்த கடுக்காக்காடு கிராமத்தைச் சோ்ந்த அதிமுக எம்ஜிஆா் இளைஞரணி செயலா் வீ. பழனிவேல், பாஜக மாவட்ட பொருளாளா் முருகானந்தம் மனைவி காந்திமதி மற்றும் புதுக்கோட்டை பிரிட்டோ நகரைச் சோ்ந்த சேக் அப்துல்லா ஆகிய 11 போ் மீது புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் க. இமயவரம்பன் வழக்குப் பதிவு செய்துள்ளாா்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனைவரும் தற்போது அதே துறையில் பிற அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சூரியஒளி மின்விளக்குகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கான ஏஜென்சி நடத்தி வந்த பழனிவேல், காந்திமதி மற்றும் சேக்அப்துல்லா ஆகியோா் வீடுகளில் ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தியதோடு, அண்மையில் அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments