கோட்டைப்பட்டினம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் 3 பேர் கைது




கோட்டைப்பட்டினம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கியூ பிரிவு போலீசார் மற்றும் ஜெகதாப்பட்டினம் போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்த காரைக்கால் மேல வாஞ்சூரை சேர்ந்த டிரைவர் சிலம்பரசன் (வயது 37), உரிமையாளர் பிரகாஷ் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெகதாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து கள்ளப்படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் 3 பேர் கைது

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்த பக்ருதீன் (28), கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மணி, மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கஞ்சாவை படகு மூலம் கடத்த இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கைதான பக்ருதீனிடம் கஞ்சாவை வாங்கி அனுப்பும் வேலையை மட்டும் செய்ய ஒருவர் கூறியிருக்கிறார். அதன்பிறகு படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல மற்றொரு கும்பல் இருந்துள்ளது. கஞ்சாவை கன்டெய்னர் லாரியில் கடத்தி கொண்டு வந்தவர்களுக்கு லாரி வாடகை மற்றும் குறிப்பிட்ட தொகையை கூலியாக பேசி ஆந்திராவில் இருந்து ஒரு கும்பல் அனுப்பி வைத்திருக்கின்றனர். அந்த நபர்கள் யார்? என்பது குறித்தும், இலங்கைக்கு கஞ்சாவை படகில் கடத்த இருந்த கும்பல், அதனை பெற இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த கஞ்சா வழக்கில் சங்கிலி தொடர் போல் பெரிய கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து புலன்விசாரணை செய்து வருகிறோம். விரைவில் மேலும் சிலர் கைதாவார்கள். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments