வலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி புதுக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு




வலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலைகள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே புதுக்குடியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் உள்ளனர். இந்த நாட்டுப்படகுகளில் மீனவர்கள் தினசரி கடலுக்கு சென்று மீன்கள் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் வீசப்படும் வலைகளை இரவு நேரங்களில் கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் மூலம் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமடைவதால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

சாலை மறியல்

இதையடுத்து வலைகளை சேதப்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், மணமேல்குடி தாசில்தார் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments