ஜெகதாப்பட்டினத்தில் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்




ஜெகதாப்பட்டினத்தில் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சூரை மீன்பிடி துறைமுகம்

சென்னை திருவொற்றியூரில் ரூ.272.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீனவ கிராமத்தில் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவ கிராமத்தில் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம் உள்பட மொத்தம் ரூ.426.13 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற மீன்பிடி கட்டமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு கடன் உதவித்தொகைகளை வழங்கினார்.

மீன்பிடி இறங்குதளம்

அதனைத்தொடர்ந்து ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா குத்துவிளக்கேற்றி வைத்தார். அதன்பின் மீன்பிடி இறங்குதளத்தை பார்வையிட்டார். இந்த மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தில், உதர விதான சுவர் 120 மீட்டர், பழைய படகு அணையும் தளத்தினை புதுப்பித்தல் 115 மீட்டர், தூர்வாருதல் 56,100 கன மீட்டர், மின்விளக்கு வசதிகள், பழைய மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் ஆகிய பணிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பயன்

இந்த மேம்படுத்தப்பட்ட மீன்படி இறங்குதளத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள ஜெகதாப்பட்டினம், அய்யம்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் பயனடைவார்கள். எனவே, தமிழக அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இதுபோன்ற நலத்திட்டங்களை மீனவர்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், துணை இயக்குனர் (மீன்வளத்துறை) பிரபாவதி, மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்துறை) சீனிவேலன், மணமேல்குடி தாசில்தார் பன்னீர்செல்வம், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், வீரையன், மீன்வள ஆய்வாளர் விதா, மீன்வள சார் ஆய்வாளர் கனகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments