புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 22,217 மாணவ- மாணவிகள் எழுதினர் 588 பேர் வரவில்லை




புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 22,217 மாணவ- மாணவிகள் எழுதினர். 588 பேர் தேர்வு எழுத வரவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 136 மையங்களில் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதல் தேர்வாக தமிழ் தேர்வு நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் 9.30 மணியளவில் தேர்வின் போது மாணவ-மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர்.

22,217 பேர் எழுதினர்

தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் 9.45 மணியளவில் தேர்வு அறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணி சத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,410 மாணவர்களும், 11,395 மாணவிகளும் என மொத்தம் 22,805 பேர் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். தேர்வினை 11,029 மாணவர்களும், 11,188 மாணவிகளும் என மொத்தம் 22,217 பேர் எழுதினர்.

588 பேர் வரவில்லை

381 மாணவர்களும், 207 மாணவிகளும் என மொத்தம் 588 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு சென்று வர பஸ் வசதி மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன.

மாவட்டங்களில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பறக்கும் படையினர் கண்காணித்தனர்

தேர்வில் துண்டு சீட் வைத்து எழுதுவதை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வு நடந்து கொண்டிருந்த போது இடை, இடையே பறக்கும் படையினர் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்க துண்டு சீட் ஏதும் வைத்திருக்கிறார்களாக? என்பதை பறக்கும் படையினர் சோதனையிட்டு கண்காணித்தனர். ஆனால் எவ்வித ஒழுங்கீன செயலிலும் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும் யாரும் பிடிபடவில்லை. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments