விபத்து அபாயத்தில் மணமேல்குடி பஸ் நிழற்குடை: சுவரில் வளர்ந்த மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை




மணமேல்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள பயணிகள் பஸ் நிறுத்த நிழற்குடை முற்றிலும் சிதிலமடைந்து விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தம் இந்த பஸ் நிறுத்தமானது மணமேல்குடி பகுதியின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். தினமும் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர்.

விரிசல் கண்ட சுவர்கள்... படர்ந்த அரசமரம்! பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பயணிகள் நிழற்குடை தற்போது முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. முக்கியமாக, இந்த கட்டிடத்தின் மீது அரசமரம் ஒன்று நன்கு வளர்ந்துள்ளதால், கட்டிடம் மேலும் சேதமடைந்துள்ளது. மரத்தின் வேர்கள் ஊடுருவி கட்டிடத்தின் சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் நிழற்குடை காணப்படுகிறது.

மின்கம்பிகளால் அதிகரிக்கும் அச்சம் அதுமட்டுமின்றி, அந்த அரசமரத்தின் கிளைகள் அருகில் செல்லும் மின்கம்பிகள் மீதும் படர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை அல்லது பலத்த காற்று வீசும் நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து நேரிட வாய்ப்புள்ளது.

அதிகாரிகளுக்கு கோரிக்கை தினமும் அச்சத்துடன் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பயணிகள் உள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன் நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும். எனவே, கட்டிடத்தை சேதப்படுத்தி மின்கம்பிகளில் படர்ந்துள்ள அரசமரத்தை உடனடியாக அகற்றுவதோடு, சிதிலமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments