அறந்தாங்கியில் ஆகஸ்ட் 3 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரப் பகுதியில், அரசுக்குச் சொந்தமான பயனற்ற நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கி, தமிழக அரசே அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர் கர்ணா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இடதுசாரி கட்சித் தலைவர்கள், தோழர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அறந்தாங்கி நகரத்தின் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், அறந்தாங்கி பகுதியில் பயனற்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டது. இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இந்த மக்களுக்குப் பட்டா கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இரண்டு முக்கியப் பொதுத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன்படி, வரும் ஜூலை 21-ஆம் தேதி (21.07.2026) அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அறந்தாங்கி முழுவதும் தீவிரப் பிரச்சார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பட்டா கிடைக்கும் வரை, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி (03.08.2026) முதல் அறந்தாங்கி கோட்டாட்சியர் (RDO) அலுவலகம் முன்பாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களைத் திரட்டி 'தொடர் காத்திருப்பு போராட்டம்' நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments