தமிழகத்தில் மார்ச். 10-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 10 ஆம் தேதி 5 வயதுக்குள்பட்ட 1.63 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் வரும் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பணிக்காக நகரப் பகுதிகளில் 47 மையங்களும், ஊரகப்பகுதிகளில் 1309 மையங்களும் என மொத்தம் 1356 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள், அனைத்து சத்துணவு மையங்களிலும் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுத் துறை மற்றும் தன்னார்வ அமைப்பினரும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 5 வயதுக்குள்பட்ட மொத்தம் 1.63 லட்சம் குழந்தைகளுக்கு இந்தச் சொட்டு மருந்து புகட்டுவதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன என்றார் உமாமகேஸ்வரி. கூட்டத்தில், சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் பரணிதரன், கலைவாணி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments