புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றோர் ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றோர் ஊக்க உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018-2019 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்க உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளம்  www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ் ஆண்டொன்றுக்கு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 மற்றும் கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களுக்கு ரூ.13,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.2017 ஜூலை 1 முதல் 2018 ஜூன் 30 முடியவுள்ள காலக் கட்டத்தில் தேசிய அளவில் விளையாட்டில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். குழுப் போட்டிகளாயின் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

தேசியளவிலான போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பத்தை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான  www.sdat.tn.gov.in -இல் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து இணையதளத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசித் தேதி மார்ச் 12. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தை 044 28364322இல் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments