கோபாலப்பட்டினத்தில் வெறி நாய்களின் தொல்லை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை



நாட்டாணி புரசக்குடி ஊராட்சி ஒன்றியம் கோபாலப்பட்டினத்தில் வெறிநாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது.

சில நேரங்களில் தெருவில் வருவோரை கடிப்பதும், விரட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.

குபா 1-வது தெருவைச் சேர்ந்த அம்ஜத் கான் அவர்களின் மகன் ஜமீல் என்ற சிறுவனை நாய் கடித்து உள்ளது. மேலும் ஒரு சிறுவனை கடித்து குதறியுள்ளது. இரண்டு சிறுவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெறிநாய்கள் கடிக்கும் போது ரேபிஸ் என்ற வைரஸ் கிருமி மனித உடலுக்குள் செல்கிறது. இந்நோய்க்கான தடுப்பு மருந்துகளின் விலை அதிகம் என்பதால் வசதியில்லாதவர்கள் பலர் உரிய சிகிச்சை மேற் கொள்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பும் இருப்பதில்லை. ரேபிஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வெறி நாய் கடித்தவுடன் வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.

முன்பெல்லாம் ஊராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோபாலப்பட்டினம் பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களின் தொல்லையை ஒழிக்க ஊராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments