நேர்மைக்கான அங்கீகாரம்: பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் முகமது யாசின்



சாலையில் கிடந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்து தமது நேர்மையால், ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் முகமது யாசின் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 


நந்தவன தோட்டம், ஈரோடு அரசுப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும், ஈரோடு நந்தவன தோட்டத்தைச் சேர்ந்த முகமது யாசின் தான் இப்பெருமைக்கு சொந்தக்காரன். நேர்மையே, இப்பெருமையை அவருக்கு தேடி தந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், பள்ளி இடைவேளையின்போது வெளியே வந்த சிறுவன் யாசினின் கண்களில் பை ஒன்று தென்பட்டது.

சாலையோரம் கிடந்த அப்பையில், கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்ட இச்சிறுவன், தமது ஆசிரியரிடம் அதனை கொடுத்துள்ளான். 50 ஆயிரம் ரூபாய் பணம் பையில் இருந்ததை பார்த்த ஆசிரியரோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சிறுவனுடன் நேரில் சந்தித்து அதனை ஒப்படைத்தார்.

இச்செய்தி ஊடகங்கள் வழியே பரவ, சிறுவன் யாசினை நேரில் வரவழைத்து பாராட்டிய நடிகர் ரஜினி காந்த், அவரின் உயர்கல்விக்கான செலவை ஏற்றார். ஏழ்மை நிலையிலும் நேர்மையாக செயல்பட்டதால், தமது மகனுக்கு பெருமை கிடைத்துள்ளது மனநெகிழ்வு அடைவதாக கூறுகிறார் சிறுவன் யாசினின் தாய்.

பாராட்டு மழையில் நனைந்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு காத்திருந்தது மற்றும் ஓர் இன்ப அதிர்ச்சி. திருத்தியமைக்கப்பட்ட தமிழக அரசின் இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், ஆத்திச்சூடி பாடத்தில், 'நேர்பட ஒழுகு' என்ற தலைப்பில், முகமது யாசின் படத்துடன் பாடம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சிறுவன் முகமது யாசின், "புத்தகத்தில் படம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்காலத்தில் காவலராக விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்

வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடிப்போர் என்றாவது ஒருநாள் நிச்சயம் போற்றப்படுவர் என்பதற்கு சான்றாகியுள்ள சிறுவன் முகமது யாசினுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments