என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு 3-ந் தேதி தொடங்குகிறது கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அட்டவணை வெளியீடு



என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஏற்கனவே சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, பொது கலந்தாய்வு வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. பொது கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் ஆன்-லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலந்தாய்வு ஆன்-லைனில் புதன்கிழமை தொடங்கி, 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. 29-ந் தேதி துணை கலந்தாய்வு நடக்கிறது.

இந்த நிலையில் பொது கலந்தாய்வில் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் எந்தெந்த நாட்களில் தங்கள் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற கால அட்டவணையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது.

கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணை விவரம் வருமாறு:-

* 200-178 கட்-ஆப் மதிப்பெண் வரை உள்ளவர்கள் (1 முதல் 9 ஆயிரத்து 872 வரையிலான தரவரிசையில் உள்ளவர்கள்) 3-ந் தேதி முதல் 10-ந்தேதிக்குள் முன்வைப்பு தொகையும், 8-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை விருப்பப்பாட பிரிவு, கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும். இதில் எத்தனை கல்லூரிகள் வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். 3-வது நிலையாக 11-ந் தேதிக்குள் தேர்வு செய்த பட்டியலில் கல்லூரிகளின் வரிசையை மாற்றி அமைத்து உறுதி செய்ய வேண்டும். 4-வது நிலையாக 11 மற்றும் 12-ந்தேதிகளில் ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும். 13-ந்தேதி இறுதி ஒதுக்கீடு அளிக்கப்படும்.

* 177.75-150 கட்-ஆப் மதிப்பெண் வரை உள்ளவர்கள் (9 ஆயிரத்து 873 முதல் 30 ஆயிரத்து 926 வரையிலான தரவரிசையில் இருப்பவர்கள்) 8-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை முன்வைப்பு தொகையும், 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விருப்பப்பாட பிரிவு, கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும். 16-ந்தேதி கல்லூரிகளின் வரிசையை மாற்றி அமைக்க வேண்டும். பின்னர், 16, 17-ந்தேதிகளில் ஒதுக்கீட்டை ஏற்று, 18-ந்தேதி இறுதி ஒதுக்கீட்டை பெறலாம்.

கட்-ஆப் மதிப்பெண்...

* 149.75-115 கட்-ஆப் மதிப்பெண் வரை உள்ளவர்கள் (30 ஆயிரத்து 927 முதல் 64 ஆயிரத்து 93 வரையிலான தரவரிசையில் இருப்பவர்கள்) 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை முன்வைப்பு தொகையும், 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை விருப்பப்பாட பிரிவு, கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும். 21-ந்தேதி கல்லூரிகளின் வரிசையை மாற்றி அமைத்து, 21, 22-ந் தேதிகளில் ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும். இவர்களுக்கு 23-ந்தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

* 114.75-77.5 கட்-ஆப் மதிப்பெண் வரை இருப்பவர்கள் (64 ஆயிரத்து 94 முதல் 1 லட்சத்து ஆயிரத்து 682 வரையிலான தரவரிசையில் உள்ளவர்கள்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை முன்வைப்பு தொகையையும், 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் விருப்பப்பாட பிரிவு, கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும். 26-ந்தேதி கல்லூரிகளின் வரிசையை மாற்றி அமைத்து உறுதி செய்ய வேண்டும். 26, 27-ந்தேதிகளில் ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும். 28-ந்தேதி இறுதி ஒதுக்கீடு அளிக்கப்படும்.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் கல்லூரிகளின் கடந்த 3 ஆண்டுகள் கல்லூரிகள் பெற்ற தேர்ச்சி, நாக் அங்கீகாரம் உட்பட அனைத்து விவரங்களும் www.tndte.gov.in, www.tne-a-o-n-l-i-ne.in இணையதளங்களில் தரப்பட்டு இருக்கின்றன. இணையதள வசதி இல்லாத மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்ற உதவி சேவை மையங்களை அணுகி கலந்தாய்வில் பங்கு பெறலாம்.

Post a Comment

0 Comments