புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் தொழிலாளி வயிற்றில் இருந்த 5 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்



புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தொழிலாளியின் வயிற்றில் இருந்த 5 கிலோ புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. நோயாளி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நெம்மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் உடையார்.
தொழிலாளியான இவர் வயிற்றுவலி காரணமாகவும், வயிறு வீக்கம் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது வயிறு பெரிய அளவில் வீக்கம் காணப்பட்டதால், அவருக்கு சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவருக்கு வயிற்றில் புற்றுநோய் கட்டி இருக்காலம் என முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் லதா, மயக்க மருந்து நிபுணர் சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுசை சிகிச்சை செய்தனர். அப்போது குடல் வால் நுனியில் இருந்த 5 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. மேலும் கட்டியை சுற்றி புற்றுநோய் பரவி இருந்த பகுதிகளும் அகற்றப்பட்டன.

தற்போது உடையார் நலமுடன் உள்ளார். இன்னும் 3 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், குடலில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் புற்றுநோய் ஏற்படலாம். உடையாருக்கு குடல்வால் பகுதியில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டு உள்ளது. 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றுவது என்பது மிகவும் சவாலானது. இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டு இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றார்.

Post a Comment

0 Comments