வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை



வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, 16 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் .

அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்றும் , இன்றும் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. நேற்று (08-08-2019) காலை தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பொதுப்பணி, போக்குவரத்து, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள், தலைமைப் பொறியாளர்கள், உள்ளிட்ட உயர்திகாரிகளும் ஆலோசனையில் பங்கு பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், தமிழக அரசு அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகின்றனவா? திட்டங்களின் தற்போதைய நிலை என்ன, திட்டங்களின் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, திட்டங்களில் உள்ள குறை நிறைகள் என்ன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு திட்டங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் தற்போதய நிலை பற்றியும் ஆலோசனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. குடிமராமத்துப் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில்,அதை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், மழைநீர் சேமிப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று(09-08-2019) நடைபெறும் கூட்டத்தில் வேலூர் தவிர்த்து இதர 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளதால், அந்த மாவட்ட ஆட்சியருடன் வேறொரு நாளில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Post a Comment

0 Comments