கோட்டைப்பட்டிணம் அருகே படகு கவிழ்ந்து மாயமான 2 மீனவர்கள் பிணமாக மீட்பு: மேலும் 2 பேர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்



ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நடராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி (வயது47), ரஞ்சித்குமார் (23), மதன்(25), இலங்கேஸ்வரன்(20), தரக்குடியான்(25), காந்திகுமார்(23), செந்தில்குமார் (31), முனீஸ்வரன்(24), உமாகாந்த்(19), காளிதாஸ்(29) ஆகிய 10 மீனவர்கள் கடந்த 2-ந் தேதி கடலூருக்கு புதிய படகு வாங்க சென்றனர்.

இவர்கள் கடலூரில் இருந்து படகை வாங்கி கொண்டு 3-ந் தேதி கடல் வழியாக ராமேசுவரத்துக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். வழியில் கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகுக்கு டீசல் நிரப்பி உள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது கடும் சூறாவளி காற்று வீசியது. இதில் படகு கவிழ்ந்து மீனவர்கள் 10 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

பின்னர் படகில் கொண்டு வந்த டீசல் கேன்கள் மற்றும் மரக்கட்டைகளை பிடித்துக்கொண்டு கரைக்கு நீந்தி வர முயற்சி செய்தனர். ஆனால் காற்றின் வேகத்தால் 10 பேரில் 8 பேர் திசைமாறி சென்று மாயமாகி விட்டனர். காளிதாஸ், செந்தில்குமார் ஆகிய இருவர் மட்டும் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கடலில் போடப்பட்டிருந்த மீன்பிடி வலையின் கயிற்றை பிடித்து உதவிக்காக காத்திருந்தனர்.

4-ந் தேதி காலை மல்லிப்பட்டினத்தில் இருந்து வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கரை சேர்த்தனர். மற்ற 8 மீனவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் சுபா உள்பட 19 பேரை கொண்ட குழுவினர் 2 படகுகள் மூலமாக அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் முத்துப்பேட்டை அருகே முனியசாமி, தரக்குடியான், முனீஸ்வரன், ரஞ்சித்குமார் ஆகிய 4 பேர் டீசல் கேனை பிடித்தபடி கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாயமான மதன், இலங்கேஸ்வரன், காந்திகுமார், உமாகாந்த் ஆகிய 4 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் 2 மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்ததும் அவர்களின் உடல்கள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நடுக்கடலில் மிதப்பதாகவும் கடலோர காவல் குழுமத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர காவல் குழுமத்தை சேர்ந்த போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டனர். உடல்கள் கரைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தான் அவர்கள் பெயர் விவரம் தெரியவரும். மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாயமான மீனவர்களின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் கலெக்டரின் வாகன டீசல் செலவுக்கு பணம் தருவதாகவும், அப்போதாவது அவர் வரவேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டவர்களிடம் துண்டை விரித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தையும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதில் வசூலான பணத்தை தாசில்தாரிடம் மீனவ பெண்கள் கொடுக்க முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வந்து கொண்டிருப்பதாகவும் கூறி போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று மீண்டும் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்தனர்.

மாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அங்கு வந்து மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் மீனவர்கள் முன்னிலையில் பேசும்போது கூறியதாவது:-

கடலில் மூழ்கி இறந்து போன 2 மீனவர்களின் உடல்களை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். மேலும் 2 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தேடும் பணி நடைபெறுகிறது. இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு மீனவர் நல வாரியம் சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு நலவாரிய உதவித்தொகை தவிர முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இந்த கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments