தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நிறைவு




தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடை பெற்றது.

இதில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல்கட்ட வாக்குப்பதிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிறுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஓட்டு போட்டார். இதேபோல அமைச்சர் செங்கோட்டையன் கோபி குள்ளம்பாளையத்தில் வாக்களித்தார்.

இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டு போட்டனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்காக இந்த 4 ஓட்டுகளை போட்டனர். முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 30-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர்.

இதற்காக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரசாரம் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காலையில் இருந்து வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வந்தனர். மதியம் இடைவெளி இல்லாமலும் பிரசாரம் தொடர்ந்தது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் ஒவ்வொருவரும் பிரசாரத்தை முடித்துக் கொண்டனர். தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன் அந்தந்த பகுதியில் தங்கி இருக்கும் வெளியூர் நபர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தல் நடத்தை விதி மீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு பிறகு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (30-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் இன்று மாலை முதல் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க போலீசார் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.


வாக்குச்சீட்டு, ஓட்டுப் பெட்டி உள்ளிட்ட பொருட்களை நாளைக்குள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குகளும் வரும் 2-ம் தேதி எண்ணப்பட உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments