போர்ஜரி வேலையில் மாரிதாஸ் - சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் நியூஸ்18 நிறுவனம் புகார்.!



பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மிரட்டும் வகையில் போர்ஜரி வேலைகளில் ஈடுபட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நியூஸ்18 நிர்வாகம் புகார் அளித்துள்ளது.


தவறைச் சுட்டிக் காட்டுவதிலும், அரசுக்கும் மக்களுக்கும் தகவல்தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவன பத்திரிகைகளும், ஊடகங்களும். ஆனால் இவற்றின் மீதான தொடர் தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன. 

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஊடக நிறுவனங்கள் மீதான மாரிதாஸின் குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளன. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.

குறிப்பிட்ட சித்தாந்தங்களின் கூடாரமாக ஊடக நிறுவனங்கள் மாறிவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். தமிழகத்தில் இயங்கி வரும் பிரபல ஊடக நிறுவனமான நியூஸ்18-ல் பணியாற்றி வரும் ஊழியர்கள் குறித்து அதன் தலைமையகத்திற்கு இ-மெயில் மூலம் குற்றச்சாட்டுகளை அனுப்பி வைத்துள்ளதாக வீடியோ மூலம் மாரிதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பான வேலைகளில் தனது குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் நியூஸ்18 இணையதளத்தின் செய்தி ஆசிரியர் வினய் சாரவாகி தனக்கு இ-மெயில் அனுப்பியிருப்பதாக கூறியிருந்தார். அதில் தன்னுடைய குற்றச்சாட்டுகளை நியூஸ்18 நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக மாரிதாஸ் பரபரப்பைக் கிளப்பினார்.

இந்த விஷயத்தை நியூஸ்18 விவகாரத்தில் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் வினய் சாரவாகியின் ட்விட்டர் பதிவு அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டது. அதாவது, தான் அப்படியொரு இ-மெயிலை அனுப்பவில்லை என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் வினய் சாரவாகி யார் என்று கூட தெரியாமல், நியூஸ்18 குழுமத் தலைவரிடம் புகார் தெரிவித்ததாக மாரிதாஸ் கூறிய பொய்கள் அம்பலமாகி இருக்கின்றது.


இந்நிலையில் அவதூறு பரப்புவது, போர்ஜரியாக கடிதம் தயாரித்து வெளியிட்டது, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மத மிரட்டல் விடுப்பது, நல்லிணக்கத்தை குலைத்து சமூகத்தில் மோதலை உருவாக்குவது, இந்துக்களை பிற மதத்தினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது, நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் மாரிதாஸ் மீது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் சட்ட ரீதியிலான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments