கீரமங்கலம் அருகே கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் குழந்தை மீட்பு! அதிகாரிகள் விசாரணை..!!



கீரமங்கலம் அருகே பயணிகள் நிழற்குடையில் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை இன்று 11.08.2020 செவ்வாய்க்கிழமை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் ஆலடிகொல்லை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது. அவ்வழியே சென்ற ஒரு மூதாட்டி குழந்தை அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார். நிழற்குடையின் உள்ள சுற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது, அந்த பையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுதவாறு இருந்துள்ளது. 


இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அளித்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் அந்த குழந்தையை மீட்டு காவல்துறையினர் உதவியுடன் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளது. மேலும் அந்த குழந்தைகளுக்கு தேவையான பால், உடை, கொசுவலை உள்ளிட்டவற்றை அந்தப் பகுதி இளைஞர்களே வாங்கிக் கொடுத்தனர். 

குழந்தை அழுது கொண்டே இருப்பதை கண்ட அங்கிருந்த பெண்கள் குழந்தைக்கு பாசத்தோடு பால் கொடுத்து குழந்தையின் அழுகையை நிறுத்தினர். குழந்தையை வீசி சென்றது குறித்து வருவாய்த் துறையினரும் கீரமங்கலம் காவல்துறையினரும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 


தொடர்ந்து, குழந்தை அறந்தாங்கி மருத்துவமனைக்கு செல்லப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பின், குழந்தையை  தொட்டில் குழந்தை திட்டத்தில் அனுமதிக்க குழந்தையை சமூகநலத் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பையில் வைத்து விட்டுச்சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், குழந்தை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த அப்பகுதி மக்களின் செயல் நெகிழ்வை ஏற்படுத்தியது.


Post a Comment

0 Comments