பெங்களூர் கலவரம்.. கோவிலை சுற்றி மனித சங்கிலி.. இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்.. நெகிழ்ச்சி!



பெங்களூரில் நேற்று முன்தினம்  இரவு கலவரம் நடந்த நிலையில் அங்கிருந்த கோவில்களை சுற்றி இஸ்லாமியர்கள் பாதுகாப்பு அரண் அமைத்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு மீது நேற்று இரவு கலவரக்காரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக செய்த பேஸ்புக் போஸ்ட் காரணமாக இந்த கலவரம் வெடித்துள்ளது.

நவீனுக்கு எதிராக கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை என்ற கோபத்தில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 1000க்கும் அதிகமான குழு கலவரத்தில் குதித்தது. இதில் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு இருக்கும் வாகனங்கள் தீ வைக்கப்பட்டது.

அதேபோல் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு சூறையாடப்பட்டது. இந்த நிலையில் இந்த கலவரத்திற்கு இடையே இந்து கோவில்களுக்கு எதுவும் ஏற்படாமல் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக அரண் அமைத்தனர். அந்த பகுதியில் இருந்த இந்து கோவில் ஒன்றை சுற்றி மனித சங்கிலி அமைத்து, பாதுகாப்பாக இவர்கள் அரண் அமைத்தனர். கலவரக்காரர்கள் கோவிலை தாக்காத வண்ணம், இவர்கள் பாதுகாப்பாக நின்றனர். பேஸ்புக் போஸ்ட் தொடர்பான பிரச்சனை மத பிரச்சனையாக மாறிவிட கூடாது என்பதால் இவர்கள் கவனமாக கோவிலை பாதுகாத்தனர்.

Post a Comment

0 Comments