சிங்கப்பூரில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை




சிங்கப்பூரில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் முத்து வேம்பையன் (வயது 32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூர் சென்றார். தற்போது அவருக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சரியான வேலை இல்லை.

இதனால் மன உளைச்சலுடன் இருந்து உள்ளார். இதுகுறித்து குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி உள்ளார். மேலும் அவருடைய குழந்தையை பார்க்க முடியாத ஆதங்கமும் இருந்துள்ளது. இதை பற்றி சிங்கப்பூரில் உடன் வேலை பார்த்த நண்பர்களிடம் புலம்பியபடி இருந்தாராம்.


சோகம்

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முத்துவேம்பையன் சிங்கப்பூரில் உள்ள அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள், முத்துவேம்பையன் குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளனர். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் முத்து வேம்பையன் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


குடும்ப கஷ்டம் போக்க கர்ப்பிணி மனைவியை விட்டு சிங்கப்பூர் சென்றவர், அவருக்கு பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments