புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்




    
        புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி, தலைமையில் காணொளிக்காட்சி வாயிலாக மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 758.2 மி.மீட்டருக்கு பதிலாக 933.0 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பைவிட 23 சதவீதம் கூடுதலாகும். டிசம்பர் மாதத்தில் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 67.60 மி.மீ ஆகும். டிசம்பர் மாதத்தில் பெறப்பட்ட மழையளவு 216.1 மி.மீ இதுவரை பதிவாகியுள்ளது. மேலும் 2020-21ம் ஆண்டில் அக்டோபர் மாதம் முடிய நெல் 84,884 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 17,737 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 2,215 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 8,259 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 1,017 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 29 எக்டர் பரப்பளவிலும், தென்னை 10,857 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 162.455 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 30.44 மெ.டன் பயறு விதைகளும், நிலக்கடலை 65.75 மெ.டன், சிறுதானியங்கள் 11.87 மெ.டன், எள் விதைகள் 3.211 மெ.டன் விதைகளும் இருப்பில் உள்ளது. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் வழங்கிடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 5,841 மெ.டன்னும், டிஏபி 1,138 மெ.டன்னும், பொட்டாஷ் 3,059 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 5,176 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டுக்கான ராபி பருவத்தில் விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல்-ஐஐஐ, மக்காச்சோளம் - ஐஐஐ, நிலக்கடலை, உளுந்து, கரும்பு மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இதர பாதிப்புகளிலிருந்து வாழ்வாதாரத்தினையும், வருவாய் இழப்பினையும் சரி செய்துகொள்ள திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் நெல் (நவரை) ஐஐஐ பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை எக்டேருக்கு ரூ.1,130 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 1.3.2021 ஆகும். மக்காச்சோளம் ஐஐஐ பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை எக்டேருக்கு ரூ.889 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 15.2.2021 ஆகும். நிலக்கடலை பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை எக்டேருக்கு ரூ.921 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 15.2.2021 ஆகும்.

மேலும் உளுந்து பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை எக்டேருக்கு ரூ.613 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 15.2.2021 ஆகும். எள் பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை எக்டேருக்கு ரூ.265 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 15.2.2021 ஆகும்.கரும்பு பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை எக்டேருக்கு ரூ.6,422 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 31.10.2021 ஆகும். விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திராமல் முன் கூட்டியே முன்மொழிவுப் படிவம், பதிவுப் படிவம், அடங்கல் 2020-21, சிட்டா நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுச் சேவை மையங்கள் ஆகியவற்றில் பதிவு செய்து பயனடைய வேண்டும். எனவே தமிழக அரசு செயல்படுத்தி வரும் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் உமாகேஸ்வரி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments